கடலை


     பீச், பார்க்,பஸ் ஸ்டாண்ட் என்று பொது இடங்களில் பக்கத்தில் இருப்பவர்களைப் பற்றிய கவலையே இல்லாமல், ஒரு ஆணும் ஒரு பெண்ணும், பேசிக்கொண்டிருந்தால் அதற்குக் "கடலை போடுதல்" என்று கண்டுபிடித்துச் சொன்னவன் யாரோ? அதைப் பற்றி 4 பக்கத்துக்கு எழுதச் சொல்லியிருந்தார் அவன் வேலை பார்க்கும் பத்திரிக்கை ஆசிரியர்.


     பேனாவைப் பிடித்தபடி,பேப்பரை முறைத்தபடி,எதை எதையோ யோசித்தபடி இருந்தான்.... எழுத முடியவில்லை நினைத்தபடி....


     ''அழைக்காதே....அழைக்காதே.... அவைதனிலே.... என்னை....யே.... ராஜா....'' பாடல் ஒலித்தது; அவனது செல் போன் ரிங் டோன் அது.

      அவசரமாய் எடுத்தான்....

      எதிர் முனையில்....

     அடே மச்சி.... தெளிவாய் ஏதும் கேட்கவில்லை; சிக்னல் ப்ராப்ளம்; தொடர்பைத் துண்டித்தான்;

     தன் பள்ளிக்கூட நண்பனுடன், கிராமத்து வீட்டில் துள்ளித் திரிந்த நினைவுகள் அலைமோதின....

     கடலைக் காட்டில் தப்புக் கடலை பெறக்கி, சுட்டுத் தின்ற சுகமான நாள்கள்....

     எழுத்தே ஓடவில்லை.... எண்ணமெல்லாம் கடலைக்குள் இருக்க, எழுத்தில் மட்டும், எப்படிக் கடலை போடுவது....?

     அவன் மனைவியும் என்னங்க.... என்னங்க.... என்று இழுத்தாள்....

     ஏன்டி.... இப்படி எழுத விடாம அனத்துற....? என்று சிடுசிடுத்தபடியே திரும்பினான்.... 

     பக்கத்தில் வைத்தாள்-''பாலித்தின் பையில் பச்சைக் கடலை.''

     பேனாவை மூடிவிட்டு....

     பரபரப்பாய்க் கடலை போட்டான்.

வரம்.


     அவன் ஒன்றும்  பெரிய எழுத்தாளன் இல்லை; ஆனால் எழுதிக்கொண்டேதான் இருப்பான்....

     அவன் கவிஞனும் இல்லை;ஆனால் தன் பெயருக்கு முன்னால் கவிஞன் என்று போடாததற்காகத் தன் கல்யாணத்தையே நிறுத்தியவன்.....

     பேனாவில் எழுதப் பிடிக்காது; பென்சில்....பென்சில்தான் தன் சிந்தனை ஓட்டத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் என்று நம்பி, பென்சிலும் பேப்பருமாய் அலைபவன்.....

     100  வார்த்தைகளை வைத்துக் கொண்டு 400 பக்கங்கள் எழுதிவிடும் சாமர்த்தியத்தைத் தெரிந்தவர்களிடமெல்லாம் படித்துக் காட்டிப் பரவசப் படுவான்.....

     ஓடி ஒழிந்தவர்களும், பின்னால் பேசியவர்களும் பாக்கியசாலிகள்.

     பாவப்பட்ட ஒரே ஜென்மம்..... தன் இஷ்ட தெய்வத்திடம் மன்றாடிக் கேட்டது விவாஹரத்தல்ல.....

     செவிடாய்ப் போகும் வரம்.