அசல் கவலை.

   கவலையோடுதான்  போயிருந்தான்; பலர் கவலைப் படுவது போல் காட்டிக் கொண்டனர்; இன்னும் சிலரோ கச்சிதமாய் அழுது, கண்ணீர் விட்டு, புடவைத் தலைப்பில் மூக்கைச் சிந்தி, அடுத்தவர்களை நோட்டம் விட்டு, நகை நட்டை எடை போட்டு, எதை எதையோ அசை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

   செத்துப் போனவனின் பிள்ளையிடம் கூடுதல் கவலைப் பட்டவனாய்.... துக்கம்  விசாரித்தான்....

    அடிவயிற்றைப் பிடித்து அப்பா அலறியதில்  தொடங்கி, ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி, அவசர சிகிச்சை, அனாப் பைசா செலவு உட்பட இத்யாதி இத்யாதிகள் ஒன்று விடாமல் ஒப்பித்துக் கொண்டிருந்தான் பிள்ளை-ஓட்டை ரெக்கார்டு மாதிரி எல்லோரிடமும்.

   கேட்டானான்னு கேட்டா சொன்னானான்னு சொல்லும்படியா இருந்தது சூழல்.

   எடுப்பதற்கு ஏற்பாடானது ... இவன் இன்னும் கூடுதலாய்க் கவலைப் பட்டான்.

   என்ன கவலைப் பட்டு என்ன செய்ய...? போன உசுரு வரவா போகுதுன்னு வியாக்கியானம் பேசாதீங்க....

    செத்தவன், வீட்டுக்குச் சொன்னானோ சொல்லலையோ.... தெரியுமோ தெரியாதோ.... தருவாங்களோ.... மாட்டாங்களோ....                                                       

    வட்டி போனாலும் பரவாயில்லை...
 
    அசலை நினைத்து, அசலாய்க் கவலைப் பட்டான்.

பாத்துப் போங்கடா...


     அந்த மட்ட மத்தியானத்து வெயிலில் தன் ஜீப்பில் கிளம்பிய சிறிது நேரத்தில் நடுத்தர வயதுப் பெரியவரும் அவரது மனைவியும் ஆளுக்கொரு பையைச் சுமந்தபடி நடந்து கொண்டிருந்தனர்....

     யார் என்று தெரியாவிட்டாலும், பாவம்.... வாகனப் போக்குவரத்து குறைந்த பகுதியில், அவர்களுக்கு உதவலாமே என்ற நல்லெண்ணத்தில் வண்டியை நிறுத்தி,வருவதானால் ஏறிக்கொள்ளுங்கள் என்றான்.
  
      மிகுந்த நன்றியோடு ஏறியவர்கள் தங்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்த போதே.... அவர்கள் இறங்க வேண்டிய இடத்திற்கு வந்துவிட்டது வண்டி.

     நிறுத்துங்க.... நிறுத்துங்க.... இறங்கனும்.... இறங்கனும்.... என்று பதறி.... பதறாமல் இறங்கி, பவ்வியமாய்க் கதவடைத்து, பல்தெரிய இளித்து, நன்றிப் பெருக்கோடு விடை பெற்றவர்களைக் கருத்தில் கொள்ளாமல் அவனது கவனமெல்லாம் வண்டி ஓட்டுவதிலேயே இருந்தது.

     சில நாள்களுக்குப் பிறகு.... அவன் தன் காரில் அதே பாதையில் போய்க் கொண்டிருந்தான்.... தூரத்தில் அதே பெரியவர் ஓட்டமும் நடையுமாய்ப் போய்க் கொண்டிருந்தார்....

     தூரிக் கொண்டிருந்த மழை, இடியும் மின்னலுமாய் மிரட்டியது; பாவம் பார்த்தவன், பக்கத்தில் போய் நிறுத்தினான்....

     பயந்து போன பெரியவர் படபடத்தார்.... இப்படியா கண் மண் தெரியாமல் வண்டி ஓட்டுறது...? உங்க அப்பன் வீட்டு ரோடா...? பொரிந்து தள்ளினார்....

     கார் போய்விட்டது....

     வார்த்தைகள் எதிரொலித்தன....

     "பாத்துப் போங்கடா...."