அரும்பின் ஆசை

பள்ளிக் கூடம் போகலாம்;
பாட்டுப்பாடி ஆடலாம்;
துள்ளித் துள்ளி ஓடலாம்;
துடுக்குத்தனம் பண்ணலாம்;

ஆடிப்படித் திரியலாம்;
ஆனந்தமாய் இருக்கலாம்;
கூடிப்பேசிக் களிக்கலாம்.
கும்மாளம் தான் போடலாம்.

என்று எண்ணி இருந்தவன்
இப்போதென்ன செய்கிறான்?
ஒன்னு கூட நடக்கல
ஒடிஞ்சு போயிக் கிடக்கிறான்.

வேலை வெட்டி செய்யிறான்;
வேகாமலே வேகுறான்;
ஓலக் குடிசை ஒழுகுதுன்னு
ஓட்ட நாழி வைக்கிறான்.

அழுக்கு பிடிச்ச சட்டைய
அடிச்சுத் தொவைக்க முடியல;
இழுத்துப் பிடிச்சுக் குத்தவே
ஊக்கு வாங்க முடியல.

கால்வயித்துக் கஞ்சிய
காலையில குடிச்சவன்;
மேல் மாடி வீட்டுல
மேஜையில்ல தொடைக்கிறான்.

பஞ்சு மிட்டாய் விக்கிறான்;
பழைய பேப்பர் பொறுக்குறான்;
பிஞ்ச செருப்பு தைக்கிறான்;
பிட்டுத் துணி விக்கிறான்.

அப்பனாத்தா சரியில்ல;
அவனுக்கினி வழியென்ன?
எப்பனாச்சும் சாமி வந்தா
இவனுக்காக வேண்டுவேன்.

0 comments:

Post a Comment