பொது அறிவு.

     எப்படி முடிகிறது? எல்லாக் கேள்விகளுக்கும் தயக்கமோ தடங்கலோ இல்லாமல் போட்டி போட்டுக் கொண்டு விடை சொன்னார்கள் புத்திசாலிகள்.
    
     கைதட்டும் பாராட்டுமாய்க்  களை  கட்டியது சபை...

     கேள்விகள் தொடர்ந்தன...

     பையா படத்துக்கு பைனான்சியர்  யார்?

     மைனா படத்தின் இசை அமைப்பாளர் யார்?

     சைனா நெடுஞ்சுவர் எந்தப் படத்தில் இடம் பெற்றது?

     நைனா கால் ஒடித்த நடிகன்(மன்னிக்கவும்) நடிகர் யார்?

     கைனா நடித்த ஒரே படம் எது?

     விரல் நுனியில் விடைகள் இருந்தன.விருது வழங்கும் சாக்கில் விரல்
தொட்ட கரை வேட்டிகள் புனிதம் பெற்றதாய்ப்  பூரிப்படைந்தன.

     இதனைப் படம் பிடித்த புகைப்படக் காரனுக்குக் கலைமாமணியும்
ஆஸ்காரும் வழங்க ஆணை பிறப்பித்தார்கள்.

     ஏடா கூடமாய் ஒரு கேள்வி பிறந்தது.... இரு வேறு விதமாய் விடை
சொன்னவர்கள்,இரு அணியாய்ப் பிரிந்து பலம் பார்த்தனர்.

     முடிவில் ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பு நடத்தித் தீர்மானித்தனர்....

                                         ஜனவரி 26  சுதந்திர தினம்.

                                         ஆகஸ்ட்  15  குடியரசு தினம். 

    விடை  தெரியாத இன்னொரு கேள்வி--எந்த நாட்டுக்கு?



    

நடுங்காத படை

      அடேய்... வேகமா வாடா... ஓடி வாடா... கம்ப எடுடா... கல்லத் தூக்குடா... வேகமா வாங்கடா... போயிரப் போகுதுடா...
    
     ஆத்தீ... எம்மாந்தடி... கருநாகம்டா... போட்டா அம்புட்டுத்தான்...

     எங்கடா...? எங்கடா...? ஏய் தள்ளி நில்லுங்கடா...

     பாத்து... பாத்து...

     அந்தா நெளியுதுடா... அடிடா... அடிடா...

     ஏய் சீறுதுடா... கவனமா அப்படியே குத்திப் பிடிடா...

     வசமா மாட்டிக்குச்சுடா... எலேய் அப்படியே பிடிச்சுக்கிறேன்... நீ தலையில கல்லப் போடு...

     நாலைந்து பேர் சேர்ந்து நையப் புடைத்தனர்...

     ஏய்... போதும்டா... உசுரு போயிருக்கும்டா...

     பொழச்சா, "நீயா" படத்துல மாதிரிப் போட்டுத் தள்ளிரும்டீ...

     செடிய வெலக்குங்கடா... நல்லாப் பாப்பம்;

     கருநாகம் இல்லடா... வெறும்  நாகம் மாதிரிதான் தெரியுது...

     மெதுவாய் மெதுவாய் வெளியே தள்ளிக் கொண்டுவந்து உற்றுப் பார்த்தால், கண்களை எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன...

     அட... செத்த பாம்பு.