நீள்கவிதை 4

1. எத்தனை எத்தனை
    சித்திரை வந்தன்
    இத்திரை மீதினிலே – அவை
            எத்தனை எத்தனை
            முத்திரை பதித்தன
            மாந்தரின் நெஞ்சினிலே.

2. பித்தரைப் போலிவர்
    பிதற்றித் திரிந்தது
    எத்தனை காலமடா – அவர்
            பித்தம் தெளிந்ததும்
            சித்தம் சிறந்ததும்
            சத்திய வேதமடா.

3. புத்தரை காந்தியைப்
    போற்றிப் புகழ்ந்த நம்
    புனிதம் போனதெங்கே – அவர்
            போதனை யாவையும்
            புதைகுழி போனதும்
            புழுக்கள் ஆனதங்கே.

4. தோல்வியும் துயரும்
    தொடரா திருப்பது
    தோல்வலி உள்ளவரை – அவர்
            புலன்கள் அடங்கிப்
            புந்தி தெளிந்தால்
            புதியன புரியமடா.

5. ஆன்மா அதற்குள்
    அறிவுச் சுடரொளி
    ஆயிரம் எழுந்ததடா – அதன்
        வெளிச்ச விழுதுகள்
        விரிந்து பரந்தொரு
        வித்தகம் ஆனதடா.

6. தெளியா ஞானச்
    செறுக்கில் மானுடம்;
    சிதிலம் ஆனதடா – அவர்
            தெளிந்து தெளிந்து
            தேரிய போது
            தெய்வதம் ஆனதடா

7. தொண்டே தொழிலாய்க்
    தொண்டவர் நெஞ்சம்
    கோவிலுக்கு இணையாகும் - அவர்
            உடல்பொருள் ஆவி
            உணர்வுகள் யாவும்
            உன்னத மானதடா.

கவலை

கையாளாகாதவர்களின்
கையிருப்பு.
        காதல் தோல்வின்
        கல்யாணப் பத்திரிக்கை.
முறிந்த உறவுகளின்
முத்திரை வாசகம்; மூச்சுக்காற்று
        பிரிவுப் பயணத்தின்
        பிறந்தநாள் வாழ்த்து.
குடும்ப விளக்குகளின்
கோஸ்டி கானம்.
        இளைய தலைமுறையின்
        இன்றைய ஸ்பெசல்.
உறக்கம் கலைத்த
உணர்ச்சிக் கொப்பளம்.

ஆசிரியர் பக்கம்:

நேற்றைய செய்தி ஒருபாதி
    நாளைய செய்தி ஒருபாதி
இன்றைய செய்தி சரிபாதி
    இவையே எங்கள் குலநீதி.

பத்தியை நிறப்பப் படுகிறபாடு
    படித்துப் பார்த்தால் தெரிந்துவிடும்
பத்தியை முழுவதும் படித்துப் பார்ப்பவன்
    பைத்தியம் என்பது புரிந்துவிடும்.

புத்தியைச் சலவை செய்வது எங்கள்
    புத்தக உலகின் செயலாகும்
கத்தியில் நடக்கும் காரியம் சிலவால்
    வாசகர் மனதில் புயலாகும்.

கவர்ச்சிப் படங்கள் இருந்தால் எங்கள்
    புத்தகம் உடனே விலைபோகும்
காட்சிக்கெளிய தலைவர்கள் என்றால்
    காகிதம் என்றே பெயராகும்.

கதைப் பக்கம் கவிதைப் பக்கம்
    சதைப் பக்கம் சந்தைப் பக்கம்
எதைப் பக்கம் போட்டாலும
    எடுப்பாய் இளசுகள் படம்வேண்டும்.

கொள்கைப் பிடிப்பெனும் சொடுஞ் சொல்லை – எங்கள்
    குலத்தில் சொல்வது பாவமடா
கொட்டிக் கொட்டிப் பணம்கொடுத்து – நீங்கள்
    குப்பையைச் சேர்;ப்பது சாபமடா.

காதோடு சொல்வதை எல்லாம் - தினம்
    கடையை விரித்துக் காட்டுகிறோம்
ஏதோ பிழைப்பு நடத்துகிறோம் - உங்கள்
    பொழுதைக் கொஞ்சம் கடத்துகிறோம்.

எதையும் மறக்கும் பண்புடையோர்
    இதையும் மறந்து விடுவீர்கள்
அதையும் நாங்கள் மறக்காமல்
    அச்சில் கோத்து வெளியிடுவோம்.

கேள்வி – பதில்:

1. சிலுக்கு வீட்டு நாய்க்குட்டி
    டிஸ்கோ வீட்டுப் பூனைக்குட்டி
    ஒப்பிடுக.
              நட்சத்திரக் குறியிட்ட
              இந்தக் கேள்வி
              ரூபாய் 50 பரிசு பெறுகிறது.

2. மன்மோகன் சிங் சிதம்பரம்
    பட்ஜெட்டுகளை ஒப்பிடுக.
              முதலாவது ‘ம்’ வி;ல் ஆரம்பித்து’ங்’ வில் முடிகிறது.
               இரண்டவது சி’ல் ஆரம்பித்து ‘ம்’ல் முடிகிறது.
    இவைதான் இன்றைய பத்திரிக்கைகளின்
    பரபரப்பான பக்கங்கள்.

சூடானாபக்கம்:

போட்டோ போட்டி இருப்பதனால்
சிலர் போட்டேர் போட்டுக்
கடை விரிப்போம்......
சூடாய்ச் செய்திக்
கதை விரிப்போம்…...
புத்திகெட்ட ஜனங்களுக்கு
பொய்யோ.….. மெய்யோ…...
புதுசா இருந்தா போதாதா?

கவர் ஸ்டோரி:

கன்னிமை கழித்த
காவல் துறையின்
கட்டுக் கதைகளை……

கவர்ச்சி அரசியலின்
கனவுக் கன்னிகளின்
காதல் பரிசுகளை……

மதன மாளிகைகளின்
மௌனப் புலம்பல்களை…...

அடக்கு முறைகளின்
அரிதாரப் பூச்சுகளை……

அடையாளம் காட்டியதற்காக

சந்தனக் கட்டைகள் போல்
நாங்கள் சாம்ளாகியிருக்கிறோம்.
அப்போதும்
எங்கள் மனம் - சந்தனம்தான்.

நடுப்பக்கம்:

நடுங்கும் குளிரில்
நனைந்த உடையில்
நம்மைக் கவர்ந்த
நாயகி ஒருத்தி!
சே!
இந்தப் பத்திரிக்கை
ரொம்ப மோசம்……
நடுப்பக்கம்
நாலு இருந்தால் என்ன?

புதுக்கவிதை 6

இந்தியா:
    உலகப்படத்தின்
    வறுமைக்கோடு

தேர்தல்:
    ஜனநாயகத்தின்
    சாபக்கேடு

வேட்பாளன்:
    வெளிநாட்டு
    வங்கியில்
    பணம் போட
    விண்ணப்பிக்கிறவன்

வாக்காளன்:
    கையெழுத்து
    வேட்டையில்
    கைநாட்டு
    வைப்பவன்

வாக்குச்சீட்டு:

    செத்தவன் கையில்
    வெற்றிலை பாக்கு
    பலரை ஏமாற்றிய
    பரிசுச் சீட்டு

பத்திரிக்கை:
    வித்தியாசமான
    அரசியல்வாதி

அரசியல்வாதி:
    பிழைக்கத் தெரிந்த
    பிணம்

புதுக்கவிதை 5

குழந்தை:
    இரு
    மையப் புள்ளிகள் கொண்ட
    ஒரு
    வட்டம்.

சந்தேகம்:
    இதுவோ
    தற்கொலை
    சாவதோ
    மற்றவர்கள்

நிவாரணநிதி:

    கால்களின்
    காயத்திற்குக்
    கைகளில்
    மருந்து

தற்பெருமை:
    கவிதை
    வியாபாரிகளின்
    விசிட்டிங் கார்டு

பொய்:
    கண்டுபிடிக்கப் படாத
    கவிதை

மனிதன்:
    ரொபாடுகளின்
    மருத்துவ
    ஆராய்ச்சிக்குப்
    பயன்படும்
    அஃறிணை

வாழ்க்கை:
    தமிழல்
    ஒரு
    வார்த்தை

                    சிறப்பு ‘ழ’ கரம் இதன் சிறப்பு

புதுக்கவிதை 4

கணக்கும் பிணக்கும் எதனால் என்ற
    காரணம் நமக்குத் தெரியாமல்
        கயமைத்தனங்கள் ஒழிவதில்லை

பணத்தின் மேலே பணத்தைப் போட்டுப்
    பாது காத்தும் பயனில்லை;
       பாடையில் பேதம் ஏதுமில்லை

பிணத்தின் மேலே பிணத்தைப் போட்டுப்
    புதைத்துப் பார்த்தும் முடியவில்லை.
        பூமியில் சவக்குழி மீதமில்லை

குணத்தில் உயர்ந்த குவலய மாந்தர்
    குழியில் இருந்தும் உயிர்த் தெழுவார்
        கோபுரம் போலே நிமிர்ந்திடுவார்
        (வேறு)

தனக்கத் தனக்கெனும் தன்னுணர்வு
    தகர்ந்தால் தேசம் நன்மை பெறும்
        எனக்கும் உனக்கும் பகைமூட்டம்
            எல்லாம் இந்தச் சுயநலமே

மனமே எதற்கும் ஆதாரம்
    மாண்புகள் தங்கும் கூடாரம்
        மனமே கனவுகள் நனவாக
            மானிடப் பண்பினை வளர்த்துவிடு.

கனக்கும் இதயச் சுமைகளுமே
    கண்ணீர் விட்டால் கரைந்திடுமோ?
        உனக்கென உருகும் இதயங்கள்
            உறுதுணை யானால் இடர்வருமா?

அன்பால் உலகை வசப்படுத்து
    அதனால் உன்னை வளப்படுத்து
        உன்னால் உலகம் வளமானால்
            உயிரின் பயனே அதுதானே!

நீள்கவிதை 3

ஒவ்வொரு அசைவிலும்
ஒருசில பூக்கள்
உதிர்வது எதனாலே?
       உயிரில் கலந்த
       மணத்தைப் பிரிந்த
       வாட்டம் அதனாலே!

நாரே நீயும்
தலையில் இருந்து
நடிப்பது எதனாலே?
       நறுமலர் தன்னை
       நயமுடன் கோர்த்த
       நளினம் அதனாலே!

பிரிவது அறியாப்
பெண்ணே உனக்குப்
பிரியம் எதனாலே?
       அழகும் மணமும்
       அருகருகிருக்கும்
       அற்புதம் அதனாலே!

சிதறிக் கிடக்கும்
பூக்கள் மெல்லச்
சிரிப்பது எதனாலே?
       சிகையெனும் சிறையில்
       சிக்கிக் கிடந்த
       சிறமம் அதனாலே!

விடுதலை என்பது
கெடுதலை ஆகிற
விசமம் எதனாலே?
       விழுவதை மிதிக்கும்
       பெண்ணே உந்தன்
       கால்கள் அதனாலே!

விழுகிற பூவில்
விதையிலை என்றால்
விழுவது வீணாகும்

தொழுகிற தெய்வம்
துணையிலை என்றால்
தொழுவது வீணாகும்

அழுகிற குழந்தை
அடிக்கிற தாயை
அன்புடன் நோக்காது

உழுகிற போது
விழுகிற வியர்வை
பூமியில் தூங்காது

உழைக்கிற போது
உதிரும் வியர்வை
உறக்கம் கொள்ளாது

எழுகிற எண்ணம்
எழுந்து விட்டால்
எழுவது என்பது எளிதாகும்

கழுமரம் கூடப்
பூக்களை உதிர்க்கும்
கவிஞன் எனக்காக.

நீள்கவிதை 2

காயழகிக் கனியான கயமையினைக் காசினியில்
    கண்ணெதிர் காண்கின்றோம் தென்னிலங்கைச் சீமையிலே!
நீயழது நானழது ஊரழுது பாரழுது
    நெஞ்சுடைய எல்லோரும் சேர்ந்தழுது சோர்ந்தோமே
சேயழது தாயழது கற்பிழந்து செத்தபின்னும்
    சேயிழையார் ஊனிழந்து மீண்டுந்தான் செத்தனரே
வாயழுது அகமகிழும் ஜெயவர்த்தன முதலைக்கு
    வஞ்சமில்லா நெஞ்சமது இருப்பதுவும் எங்கேதான்?

கொன்று குவித்தனர் வெந்து தனிந்திடக்
    கொள்ளை யடித்தனர்; தொல்லை கொடுத்தனர்
கன்று பிரித்தனர்; கட்டி வதைத்தனர்
    கற்பு பறித்தனர்; காலில் உதைத்தனர்
நின்று எரித்தனர்; நெஞ்சு துடித்திட
    நஞ்சு கொடுத்தனர்; நாட்டை அழித்தனர்
குன்று பொடித்திடச் சிற்றுளி யாகிய
    கொடியர்க் இதயமும் எங்கே இருக்கிறது?

வாழ்ந்தவர்க்குத் தன்னாட்டில் வாழுதற்கு வழியில்லை
    என்றவெறி வகுப்புவாதப் போர்தொடுத்துச் சீரழிக்கச்
சூழ்ந்தவர்க்குத் துணைநின்று தூண்டிவிடும் பேடியரைத்
    தோழுரித்துப் போடுதற்குத் தாவிடட்டும் போர்ப்புலிகள்
போழ்ந்தவர்க்கு உடலிருக்கம் உதிரத்தை உரிஞ்சிவிட்டுப்
    போதிக்கும் போதுணர்வார் பொல்லாதார் உயிர்த்துடிப்பை;
தாழ்ந்தவர்க்குத் தருமத்தின் தீர்பதனைச் சொல்லாத
    தருதலைக்கு இதயமுமே கல்லாக இருக்கிறதோ?

இன்னாவே செய்தவர்க்கு நன்னயங்கள் செய்தாலோ
    இளித்தவாயர் ஆக்கிடுவார் சிங்களத்துச் சிறுநரிகள்;
முன்னாலே செய்தவினை பின்னாலே வருமென்ற
    முறையான பாடத்தை மூடர்களுக் கடித்துரைத்துச்
சொன்னாலே அடங்கிடுவார்; சோர்வில்லா இளைஞர்களே
    துப்பாக்கி தூக்கிடுங்கள்; துன்பமெல்லாம் போக்கிடுங்கள்;
தன்மானத் தமிழ்மக்கள் அழுகின்ற கண்ணீரே
    வேலாக வேண்டாம்; வெடிகுண்டாக வேண்டுகிறேன்.

மூண்டெழுந்த பகைநெருப்பால் முத்தமிழர் தொகையழித்து
    மூத்தபல பெரியரையும் முத்துநகைச் சிறியரையும்
மாண்டழியச் செய்துவிட்டு மங்கையரின் மானத்தை
    மங்காத செல்வத்தைச் சீரழிந்த சிங்களவர்
பூண்டோடு அழிவதற்குப் புலிப்படைகள் திறளட்டும்
    போர்ப்பறைகள் அதிரட்டும்; பொற்காலம் புலரட்டும்
வேண்டுகின்ற தமிழீலம் விரைவாக மலரட்டும்
    மேதினியில் மேன்மையுடன் நம்தமிழர் வாழட்டும்……

புதுக்கவிதை 3

சந்தனப் பொய்கையில் சாமரம் வீசியா
    மாருதம் வருகிறது? – மந்த
மாருதம் வருகிறது?

காலையில் சேவலும் கூவியா வானிலே
    சூரியன் எழுகிறது? – ஒளிச்
சூரியன் எழுகிறது?

மாங்குயில் கூவிடும் மாமரச் சோலையில்
    வீணையும் எதற்காக? - இசை
வீணையும் எதற்காக?

மாந்தளிர் மேனியாள் மங்கையின் மார்பிலே
    மாலைகள் விழவேண்டும் - திருமண
மாலைகள் விழவேண்டும்.

காமனைக் கும்பிடும் கயவர்கள் மத்தியல்
    காதலும் எதற்காக? உயர்
காதலும் எதற்காக?

மனிதரை மனிதரே மதித்திடா உலகினில்
    பிறவியம் எதற்காக? மானிடப்
பிறவியும் எதற்காக?

நீள்கவிதை

அண்ணன் மாரே தம்பி மாரே
    கொஞ்சம் நில்லுங்க
ரெம்ப அநியாயம் நடக்குதுங்க
    சொன்னாக் கேளுய்க.

எண்ணி எண்ணி உழச்சவங்க
    ஏழைகளா ரோட்டிலே – அட
ஏமாத்திப் பொழைச்சவங்க
    எண்ணுராக நோட்டுக.

தண்ணி வித்து பன்னி வித்து
    பணத்த ரொம்ப புறட்டுரான் - அட
தட்டுக்கெட்ட கூட்டத்தையே
    ஓட்டுப் போடத் திறட்டுறான்.

கண்ணியமா நடக்கச் சொல்லி
    காது கிழியக் கத்துரான் - அட
கத்திப் போட்டு கடத்தெருவில்
    கள்ள நோட் அடிக்கிறான்.

புண்ணியமா தொண்டு செஞ்சா
    புழுதி வாரி எரைக்கிறான் - அட
புத்திமதி சொன்ன முன்னா
    புரிஞ்சுக்காம மொறைக்கிறான்.

திண்ண சோறு செமிக்க லண்ணு
    மாத்திரைக முழுங்குறான் - அட
மாத்திரையுஞ் செமிக்கலன்னு
    மருந்து வாங்கிக் குடிக்கிறான்.

தென்னையிலே கள்ளிறக்கித்
    தீருமட்டுங் குடிக்கிறான் - அட
திண்ணையிலே படுத்துறங்கி
    தேவதாஸா நடிக்கிறான்.

பண்ணையிலே உழைச்சவங்க
    பருக்கையத்தான் பாக்கலே – அட
பாடுபட்ட கூலியத்ததான்
    பண்ணையாரு கொடுக்கலே;

பண்ணையாரு பட்டுலதான்
    மடிப்பு இன்னும் மாறலே – அட
பாட்டாளி இடுப்புலயோ
    பழையதுணி மாறலே

மண்மேடு திருத்தியதில்
    மாளிகைகள் கட்டினான் - அட
மழைபேயும் வேளையிலே
    மரத்தடியில் ஒட்டினான்.

வேசம் போட்டு நடிச்சவங்க
    வெல்வெட்டில் நடக்கிறான் - அட
கோசம் போட்டுக் கொடிபுடுச்ச
    கூட்டம் ரோட்டில் கிடக்குறான்

நாசமான கட்சியிலே
    நாலு பேரு இருக்கிறான் - அட
நாலு நாளில் பிரிஞ்சு போயி
    நாலு கட்சி அமைக்கிறான்.

தூசு தட்டித் தொடச்சு எடுத்து
    கொள்கைகள் விளக்குறான் - அட
துண்டுகள மாத்திப் போட்டு
    தோழமைய வளக்குறான்.

காசு கேட்டு நடுத்தெருவுல
    உண்டியலக் குலுக்குறான் - அட
சோலிச உண்டியல
    சோத்துக்காக உடைக்கிறான்.

ஏசு புத்தன் காந்தி என்று
    என்னனன்னமோ அளக்குறான் - அட
இளிச்ச வாயன் தலையிலதான்
    இழுத்து வச்சு அறைக்கிறான்.

கதரு வேட்டிக் காரனுக்கு
    காந்தியத் தான் தெரியல – அட
கதறிஅழும் ஏழைகளின்
    கண்ணீருந்தான் மறையல

பேசும் போது இலக்கணத்த
    வீசுறதில் சூரன் தான் - அட
பித்தலாட்டஞ் செய்யுறதில்
    பிறவியிலே வீரன்தான்

கலப்படங்கள் செஞ்சு செஞ்சு
    கடத்தெருவில் விக்குறான் - அட
காவல்துறை காரங்க எல்லாம்
    காவ காத்து நிக்குறான்

பழுப்படஞ்ச அரிசியிலே
    பாதாங்கீரு பண்ணுறான் - அட
பச்சத் தண்ணி கூட ஒரு
    பத்துக் காசு என்னுறான்

உளுத்துப் போன பருப்புலயும்
    உளுந்தவடை பண்ணுறான் - அட
ஊசிப்போன பட்சணத்த
    ஒருவராமா விக்குறான்.

கொழுத்துப் போன பட்லருக்கு
    காசு ஏதுங் குடுக்கலன்னா
மொறைச்சு மெல்ல பாத்து நம்ம
    எச்சிலையே துப்புறான்.

கழுத்துவர சாப்பிடல
    கால் வயிறு நெம்பிடல – அட
கடமுடான்னு வந்த சத்தம்
    மூச்சுவிட முடியலயே

நடைப்பிணமாய் அலைவதுதான்
    நாகரீகப் போதையா – அட
நல்லவர்கள் சொன்னவழி
நாமவந்த பாதையா?

குடைபிடித்து உன்முதுகில்
    குதிரையேறக் குனிவதா? – அட
முதலாளி என்று சொல்லி
    முழந்தாளில் பணிவதா?

தொடை இடுக்கில் கைபுதைத்துத்
    தூங்குவதும் ஏனடா – அட (ஒரு)
தோட்டாவாய்ப் புற்ப்பட்டால்
    தோல்வியதும் ஏதடா?

படைதிறண்டு வந்துநாமும்
    பயணத்தைத் தொடங்குவோம் - அட
புதிதாக இனியேனும்
    மனிதருக்குள் அடங்குவோம்.

உறவின் அவலம்

1.  அட போடா போடா கிறுக்கா - நீ
             எங்க வந்த முறுக்கா
     அட மூடா மூடா உனக்கு - இந்த
             புத்தி இருப்பது எதுக்கு?

2.  அன்பு என்று சொல்லக் கொண்டு
             அலையுது உன் மனசு - அட
     அன்பு என்று சொல்வ தெல்லாம்
             அந்தக் காலப் பழசு.

3.  முன்ன ஒன்னு பின்ன ஒன்னு
             சொல்வது தான் புதுசு - அட
     முதுகில தான் மொய்க்கும் இந்த
             ஈக்கள் பல தினுசு.

4.  அண்ணன் எனத் தங்கை என
             வாழ்ந்த கதை எல்லாம் - அட
     அடுப்பங் கரை சாம்பல் என
             ஆறிப் போன பின்னே,

5.  தொடச் செடுத்து அள்ளிக் கொண்டு
             தூரக் கொட்டு பெண்ணே - அட
     தூசி யாகப் பறந்து வரும்
             தூர விலகு கண்ணே!

6.  இடிச்ச புளிய எடுத்து வச்ச
             ஓலக் கொட்டான் போல - அட
     ஒடிஞ்சு விழுந்த மனசுக் கென்ன
             ஒட்டுப் போடுற வேல.

7.  ஒட்டுப் போட ஒட்டுப் போட
             ஒடைஞ்சு போற கம்பு - அட
     எட்டத் தூக்கி எறிஞ்சு விடு
             எதுக்கு இந்த வம்பு.

8.  பட்டுப் போன இலை நொறுங்கிப்
             பாட்டுப் பாடும் பாரு - அட
     விட்டுப் போன உறவை எண்ணி
             விசும்பி நிற்பது யாரு?

9.  மொட்டுப் போல மன சிருந்தா
             வாசம் எப்படி வீசும்? – அட
     மொட்டு மெல்ல மலர்ந்த போது
             தென்றல் வந்து பேசும்.

10.  வண்ண வண்ணக் கனவுகளை
               வரைஞ்சு வச்ச கையே - அட
       வக்கரித்துக் கொட்டி விடும்
               வரைஞ்ச படத்தில் மையே.

11.  திண்ணத் திண்ணத் திகட்டி விடும்
               தீஞ்சுவைகள் எல்லாம் - அட
       தின்ற பிறகு புத்தி வந்து
               தெரிவது தான் எல்லாம்.

12.  ஒன்னும் ஒன்னும் சேரும் போது
               ஒன்னு ரெண்டா மாறும் - அட
       ஒன்னம் ஒன்னும் பெருக்கும் போது
               ஒன்னு தானே தேரும்.

13.  ஒன்னப் போல உலகைப் போல
               நானிருக்க மாட்டேன் - அட
       ஒன்றை யேனும் செய்தி டாமல்
               உசிரை விட மாட்டேன்.

14.  வெம்பிப் போன பிஞ்சு லேயும்
               விதை இருக்குது பாரு - அட
       விதைகளுக்குள் ஒழிஞ்சு இறக்கிற
               விதைகள் எத்தனை கூறு?

15.  தும்பை விட்டு வாலைப் பிடிக்கும்
               புத்திசாலிக் கூட்டம் - அட
       தூக்கி எற்ஞ்ச பந்துகள் தான்
               துள்ளிக் குதிக்கும்; ஆட்டம்.

16.  தும்பி எல்லாம் பூவை விட்டுத்
               தூர விரலகிப் பேனா - அட
       துன்ப மெல்லாம் ஓடிவிடும்
               தூக்கம் வரும் தானா.

17.  நம்பி வந்த நடு வழியில
               நாலு பாதை பிரிஞ்சா - அட
       நம்ம வழிய நாம பாத்து
               நடக்க வேணும் தெரிஞ்சா.

18.  கட்டுப் போட கட்டுப் போட
               ஆறிப் போகும் புண்ணு - அட
       கட்டுச் சோத்துல எலிய வச்சுக்
               கட்ட லாமா கண்ணு?

19.  வெட்டி விட வெட்டி விட
               ஒட்டி வளரும் களைதான் - அட
       வெட்டிப் பயல் உனக் கெதுக்கு
               வெடித்த பலாச் சுளைதான்.

20.  தட்டி விடத் தட்டி விடத்
                தாங்கிப் பிடிக்கும் வயசு - அட
       குட்டி விடக் குட்டி விடக்
               குனிஞ்சு கொடுக்கும் மனசு

21.  எட்டி உதைச்ச கால் களிலே
               என்ன வசியம் வச்சியோ - அட
       எழுந்து வந்து கால டியில்
               ஏனோ தவம் கிடக்கிறேன்.

22.  உரசி உரசி பாத்த முன்னா
               தங்கம் கரைஞ்சு போகும் - அட
       உரசா மலே எடுத்த முன்னா
               பித்தளை கலந்து போகும்.

23.  உரசும் போது மனசுக் குள்ளே
               எழுந்து நிக்கிற ஆச - அட
       விரசம் ஒன்னு வந்து விட்டா
               விழுந்து விடும் பூச.

24.  ஒன்னு போல ஒன்னு இருந்தா
               மாற்றம் எப்படித் தெரியும் - அட
       மாற்றம் இல்லா வாழ்க்கை யிலே
               மகிழ்ச்சி எப்படி விரியும்?

25.  என்னப் போல உன்னப் போல
               யாரும் இருக்க வேண்டாம் - அட
       என்ன நமக்கு நடந்த தென்று
               யாரும் அறிய வேண்டாம்.

26.  நாயும் நரியும் நட்பு என்று
               நம்பி வந்த மானே - அட
       நாளை நீயும் நாய் நரியின்
               நல்ல வேட்டை தானே.

27.  நீயும் நானும் சிரித்த தெல்லாம்
               போலி யான வேசம் - அட
       போயும் போயும் நமக் கெதுக்குப்  
               புனித மான பாசம்?

28.  தாயும் சேயும் சேர்ந்து போனா
               தாரு மாறா ஏசும் - அட
       வாயும் வயிறும் வேறு என்று
               தத்து வங்கள் பேசும்.

29.  போயும் போயும் இந்த உலகில்
               நான் இருக்க லாமா? - அட
       நீயும் கூட என்ன விட்டுப்
               போயி ருக்கலாமா?

30.  தேயும் அந்த நிலவினை நான்
               தேடித் தேடித் திரிகிறேன் - அட
       தேய்ந்து நிலவு வளரும் போது
               தேய்ந்து நானும் மடிகிறேன்.

31.  சாய்ந்த மரம் காய்ந்த தனால்
               வேரின் மீது வெறுப்பு – அட
       காய்ந்த மரம் சாய்ந்த தற்குக்
               கிளை களன்றோ பொறுப்பு.

32.  பாய்ந்த புலி பதுங்கு வதால்
               பாய்வ தற்கா தயக்கம் - அட
       படுத்து றங்கப் போவது போல்
               பாசாங்கு மயக்கம்.

33.  ஓய்ந்து மனம் உலன்று தினம்
               ஒடுங்கி விடும் வேளை - அட
       ஆய்ந்து அறிய முடியாமல்
               அடங்கி விடும் நாளை.

34.  ஏதுக்கடா இப்படி நான்
               ஏளனமாய்ப் போனேன் - அட
       தீது செய்த பாவியைப் போல்
               திட்டி விரட்ட லானேன்.

35.  ஓதி வைத்த இலக்க ணங்கள்
               உதவ வில்லை எனக்கு - அட
       பாதிப் பாடம் படித்த தனால்
               பயனும் இல்லை உனக்கு.

36.  போது மடா இது வரையில்
               புலம்பி அழுத தெல்லாம் - அட
       தூது போக யாரு மில்ல
               தூய உறவு சொல்ல.

37.  மோது தடா விழி இரண்டில்
               மோக னமாய்த் தூக்கம் - அட
       மேதி னியில் எனக் கிருக்குது
               எத்த னையோ ஏக்கம்;

38.  விட்டு மனம் வெறுத் தவளை
               விலகி விட முடியுமா? - அட
       விருப்பம் இல்லை என்று சொல்லி
               உசிரை விட முடியுமா?

39.  நீரடித்து நீர் விலக
               நீள் நிலத்தில் முடியுமா? - அட
       நீ அடித்து நான் அழுக
               நீயும் சிரிக்க முடியுமா?

40.  ஊர் சிரிக்கும் வாய் அடக்க
               மூடி செய்ய முடியமா? - அட
       தேர் இழுக்கும் வடம் திரிக்க
               நார் உரிக்க முடியுமா? – கல்
               நார் உரிக்க முடியுமா?

41.  யார்எதனைச் சொன்ன போதும்
               நாம் பிரிய லாகுமா? - அட
       உயிர் இருக்கும் வரை நாமும்
               உடன் பிறப்பு அல்லவா!

42.  எங்கோ ஏதோ இடிக்கிறது - அட
               ஏனோ என்மனம் துடிக்கிறது
       பங்கோ பகையோ அடிக்கிறது - அட
               பாசம் என்றே நடிக்கிறது.

43.  மாற்றம் ஒன்று வரவேண்டு - அட
               மாட்சிமை எல்லாம் தரவேண்டும்;
       ஏற்றம் எனக்கு வரவேண்டும் - அட
               ஏக்கம் தீர வரம்வேண்டும்.

44.  காலம் இனியும் கடத்தாதே - அட
               காரியம் தவறாய் நடத்தாதே;
       ஞாலம் முழுதும் இடம் வேண்டும் - அட
               நாளும் எனக்கு நலம் வேண்டும்.

45.  என்னைப் பிடித்த இடறெல்லாம் - அட
               இன்றோ பொழிந்து போகட்டும்; (என்)
       எண்ணம் எல்லாம் ஈடேற - அட
               எதிர்புகள் எல்லாம் சாகட்டும்.
               என் வாழ்வில்
               இன்பம் பொங்கட்டும்;
               இனிமை தங்கட்டும்;
               புதியபாதை அமையட்டும்;
               பொற்காலம் மலரட்டும்.

தழிழ்த் தாய் வாழ்த்து 2

தத்தத்தன                      தத்தத்                தனதன
தத்தத்தன                      தத்தத்                தனதன
தத்தத்தன                      தத்தத்                தனதன                   தனதான

சொத்துத்தரு               வித்துத்             தமிழென
பொற்புக்கவி               மெச்சத்             தருவொரு
பக்கத்துணை               நிற்கத்               தடையெது            திருநாளில்?

சொட்டக்கவி               எட்டுச்               சுவையினில்
கட்டித்தரு                     பட்டுக்               குயிலென
காற்றிட்டவர்               சொக்கத்           தலைகுனி            மயிலாவள்

பச்சைத்தமிழ்               இச்சைத்            தனியொரு
கட்டுப்பொழில்           முத்துத்              திருவென
எட்டுத்திசை                 எட்டிச்                செழுபுகழ்              தமிழாவள்

பத்துப்படை                  முட்டிப்              பொருதிட
மொட்டுத்தமிழ்            கட்டுக்               கதையினை
சுட்டித்தகர்                     புத்துக்                கவிதரு                 கனளாவள்

செட்டித்தமிழ்                செட்டுப்            பொருளென
இற்றைக்கவி                விட்டுத்            தருவன
அச்சுப்பிழை                   வெட்டித்          தகர்வது                எவர்கூறு?

செப்புச்சிலை                 தொட்டுச்        சிலரிது
கற்புச்சிலை                   இக்குப்              பனிமலர்
உச்சித்தலை                  வைத்துப்         பணிவது               தமிழ்தாளை.

தானம்

பழைய உடைகளை
பிள்ளைகள் நிராகரித்தனர்
தயங்கித் தயங்கி
தானம் தந்தேன்
அனாதைக் குழந்தைகள்
அணிந்த போது
அழகாய் இருந்தன......
அசிங்கமாய் தெரிந்தனர்
என் பிள்ளைகள்.

இ.பி.கோ. - இருபால் பிணைப்புக் கோட்பாடு!

        பொன்னும் மணியும் பூட்டி மகிழ்ந்து, சீராட்டிப் பாராட்டி வளர்த்த செல்ல மகளை, நல்லவன் கையில் ஒப்படைப்பதாய் எண்ணி, ஏமாந்து போகிற எத்தனை எத்தனையோ பெற்றோர் இரத்தக் கண்ணீர் வடிக்கக் காரணம் என்ன?

        ஆணாதிக்க சமூகம் பெண்ணை அடிமையாகவும், போகப் பொருளாகவும் எண்ணி மேலாதிக்கம் (Male ஆதிக்கம்) செய்கிற மெத்தனம், எண்ணம் சொல் செயல் எல்லாவற்றிலும் இரண்டறக் கலந்து விட்ட கயமையால், கண்ணீர் வடிக்கிற குடும்ப விளக்குகள் ஒளிவீச வழி என்ன?

        அச்சம், நாணம், மடம் பயிர்ப்பு என்ற பத்தாம் பசலித்தனமான பண்புகளை வகுத்துத் திணித்து இருட்டடிப்புச் செய்கிற போலித்தனத்தால், மூச்சுக் காற்றுக்குக் கூட முக்காடு போட்டு விடுகிற, முட்டாள்தனமான மூர்க்கத்தனங்களை முறியடிக்கத் தேவையான முனைப்பு என்ன?

        கல்லானாலும் கணவன், புல் (Full) ஆனாலும் புருசன் என்கிற புறட்டுத்தனத்தால் சஞ்சலப்பட்டுப் பதிவிரதைகளாய்ப் பட்டம் பெற்று, பழி பாவங்களுக்கு அஞ்சிப் புதைகுழி போகிற நடைப்பிணங்களை வாழ்விக்க வழி என்ன?

        “ஆண்மகன் ஆயிரம் செய்வேன், பெட்டைக் கழுதைக்கென்ன அத்தனை திமிர்”, என்று ஆர்ப்பறிக்கிற ஆணாதிக்கத்தின் ஆணவத்தை, அகங்காரத்தை அடியோடு அழிக்கிற ஆற்றல்மிகு அஸ்திரம் என்ன?

        சமய சந்தர்ப்பம் பாராத, சம்பளம் இல்லாத வேலைக்காரிகளாய், பிள்ளைகள் பெற்றுத்தரும் இயந்திரங்களாய், அடிமைச் சாசனம் எழுதித்தராத ஆட்டு மந்தைகளாய், குடிகாரக் கணவனுக்கும் குற்றேவல் செய்கிற குணவதிகளாய், அடுப்படி ஒன்றே திருப்பதி என்று தெருப்படி தாண்டாத கிணற்றுத் தவளைகளாய் இன்றைக்கும் இருக்கிற இந்த ஏமாளிகளை உய்விக்கும் உபாயம் என்ன?

        இப்படி என்ன என்ன என்ன என்கிற கேள்விக் கணைகளுக்கு மத்தியில், காலம் மாறிவிட்டதன் அடையாளமாய், புதிய விடியலின் பூபாளமாய், அடிமைத்தனத்தை அடியோடழிக்கும் அலைப்படையாய், அனற்பிழம்பாய், ஆளுமை மிகுந்த ஆவேசப் புயலாய் “எதுவும் முடியும் என்னால்” என்று எத்துறையிலும் பெண்கள் இன்று முத்திரை பதிக்கிற முனைப்பில் 100 சதம் இருந்தாலும் 33 சதம் ஒதுக்கீடு செய்யவே உடன்படாத உதவாக்கரைகள் 200 சதம் இருக்கிறார்கள்.

        வரதட்சணைத் தடைச்சட்டம், பெண் சிசுக்கொலைத் தடைச் சட்டம், பாலியல் பலாத்காரத் தடைச்சட்டம், பெண்மக்கள் சொத்துரிமைச் சட்டம், பெண் வன்கொடுமைத் தடைச்சட்டம் இன்னும் பற்பல சட்டங்கள் இயற்றி, அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் ஆயிரமாயிரம் வந்த பின்னும்,

        “தப்பித்தால் தப்பில்லை”

        என்கிற தான்தோன்றித்தனமான போக்கு மேலோங்க, அத்தனை இ.பி.கோ.விலும் தப்பித்து விடுகிற சாமர்த்தியமான சந்தர்ப்பங்களைச் சட்டமே தந்து விடுவதால் தர்ம ஸ்தூபிகள் தள்ளாடுகின்றன.

        விலையுயர்ந்த பொருட்களைப் பிறந்த வீட்டிலிருந்து பெற்று வரும்படி மனைவியைக் கணவனோ அவனைச் சார்ந்தவர்களோ வற்புறுத்தினால் இ.பி.கோ.498 அ பிரிவின்படி அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கலாம்; ஆனால் அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியோ 3 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை தரும் அதிகார உச்சவரம்பைப் பெற்றிருப்பது போன்ற முரண்கள் சட்டத்தின் எல்லா மூலை முடுக்குகளிலும் நிறைந்திருப்பதால்,

        ஸ்ரீ ராமன்களைக் கூண்டில் நிறுத்தி,
                ராவணன்களைக் காப்பாற்ற,
        சீதாப்பிராட்டிகளே சிலிர்த்தெழும்போது
                சிறைக் கம்பிகளுக்குள்
        மண்டோதரிகளே மாட்டிக் கொள்கிறார்கள்.

        அறிவின் ஆளுமை அதிகரிக்க அதிகரிக்க உணர்வின் உன்னதம் உதிர்ந்து போவதால், உறவுப்பாலங்கள் உடைந்து போகின்றன. சட்டத்தால் ஓட்டுப் போடும் ஓட்டைப் படகுகள், ஆழ்கடலின் அலைகளுக்குள் அகப்பட்டுக் கொள்வதால், ஓரக்கடலில் ஒதுக்கப்படுகிற உறவுப் பிணங்களை, உற்று நோக்கும் சட்டக் கழுகுகள் சாப்பிட்டு விடுகின்றன.

        “இரவும் நிலவும் வளரட்டுமே – நம் இனிமை சுகங்கள் தொடரட்டுமே……” என்று,

        யாசிக்கவும், தன் தேவைக்காக மட்டுமே நேசிக்கவும் சாய்ந்த இரவுகளின் சல்லாபப் பொழுதுகளில் பூஜிக்கவும் வெட்கப்படாத விசமிகள் நச்சுக் கிருமிகளாய், நாடெங்கும் இருப்பதால்,-

        “நேற்று - குழந்தை
         இன்று - குமரி
         நாளை - அடிமை”

        என்கிற இரத்தப் புற்றுநோய், நம் நாடி நரம்புகளை அரித்துத் தின்றுவிடும் அவலம், காலம் காலமாய்த் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

        பிழையான பாட்டைப் பிழையென்று சொன்னதற்கே நெற்றிக்கண் திறந்த திருநீலகண்டன், சரிபாதி பெண்மைக்குத் தந்தான் என்ற தத்துவத்தை, உடன்கட்டை ஏற்ற மட்டுமே உபயோகித்த உத்தமர்கள், ஆண்டவன் சாபத்திற்கு ஆளாகிப் போனதால் சிதையூட்டாத சீதைகளைச் சிறைபிடித்துச் சிற்றின்பப் போதையில், “சிவாய”, என்றவர்க்கு அபாயமில்லையே!

        காலம் காலமாய்க் கதவுகளுக்குப் பின்னால் நடக்கிற இந்தக் கயமைகளுக்குக் கண்ணீர்த் தாரைகளே சாட்சிகளாயின. இந்தக் காட்சிகள் மாறும் காலம் வந்தது…… கொஞ்சம் கொஞ்சமாயக் கண்கள் திறந்தன…… நஞ்சு மனங்களின் நாசம் மறைந்தன……

        எங்கோ மூலையில் இருட்டடிப்பாய் இன்றும் தொடரும் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வராமல் வீட்டுக் கதவுகளே காபந்து செய்கிற கயமை, கற்பூரம் போலக் கணநேரம் எரிந்து கரும்புகையின் கரிபூசிவிடும் என்பதைக் காலம் உணர்த்தும் வரை, காத்திருக்க வேண்டாம்.

        வீடுகளின் வெளிச்சம் வீதிகளுக்கு வரட்டும்: வீதியின் இருட்டில் வீணைகள் வீறுகொண்டு எழட்டும். அச்சம் அகன்று நாணமும் மடமும் பெண்ணுக்கு வேண்டாம்; பயிர்ப்பு என்பது ஆடவர் பண்பாய் ஏற்றுக் கொண்டால் ஆணும் பெண்ணும் சமமென்ற ஆடையின் மாற்றங்களைப் போலவே, அச்சு அசலாய், 50க்கு 50 மாட்சிமை பொங்கும் மகத்துவமாகும். அப்போது இ.பி.கோ. என்பது “இருபால் பிணைப்புக் கோட்பாடாய்”, அகிலம் புகழும் அர்த்தனாரீஸ்வரராய், ஆனந்தத் தாண்டவம் ஆடும்.

        கவனக்குறிப்பு : தாலி கட்டிய பாவத்திற்காகத் தனிமையில் கண்ணீர் விட்டுக் கதறியழும் கண்ணியமான கணவனாய் நொந்து நூலாய்ப் போன ஆயிரத்தில் ஒருவன்களுக்கு எந்த வன்கொடுமைச் சட்டமும் வக்காலத்து வாங்காதது கணக்கில் வராத சாபக்கேடு.

அற்பம்

        என்ன…… என்ன நினைத்துக் கொண்டு புறப்பட்டானோ? வீட்டில் யார் யார் வழி அனுப்பி வைத்தார்களோ! ஒருவரும் இல்லாதவனாகக்கூட இருக்கலாம்.

        சகுனம் சரியாய் இல்லையா? பார்த்தானா? பார்க்க வில்லையா? எதுவும் தெரியாது……

        முட்டாள்தனமான எத்தனையோ சம்பிரதாயங்களைக் கட்டுடைத்த அவசர உலகத்தில் இவனுக்கு என்ன அவசரமோ……

        எவரெவர் எதெதெதற்காக எங்கெங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பது எவருக்குத் தெரியும்……?

        “எங்கே எதற்குப் பயணம்;
          ஏதும் அறியாமல் விழிக்கும்;
          லாரியில் அடி மாடுகள்”.

        இப்படித்தான் எல்லோரும் பெரும் பயணத்திற்கான ஒத்துகையாய் எத்தனையோ சிறுபயணங்கள் செய்கிறோம்……

        இவன் கூட எந்த நினைவில் எங்கு போய்க் கொண்டிருந்தானோ……? நிகழக் கூடாதது நிகழ்ந்து விட்டது.

        வெறித்த விழிகளோடு சிரித்த முகமாய்ச் செத்துக் கிடக்கிறான். ஓரத்தில் தான் போயிருக்கிறான்...... ஒரே அடியில் போய்விட்டேனே! எப்படி……?

        எருமை வாகனத்தில் வரவேண்டிய எமன் எந்த வாகனத்தில் வந்தான் இவனுக்காக?

        விதி யாரை விட்டது என்று வியாக்கியானம் பேசிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் - இடித்த வண்டியைப் பிடித்துக் கொடுக்கவோ, துடிக்கிற உயிரைக் காப்பாற்ற நினைக்கவோ ஆளில்லாமல் போனதால் சிரித்தபடி செத்துக் கிடக்கிறான்.

        எட்டி நின்று எட்டிப்பார்ப்பவர் கண்களுக்கு எளிதில் தட்டுப்பட்டது அது.

        கொஞ்சம் கொஞ்சமாய்க் கூட்டம் சேர்ந்தது…… முந்தி வந்தவன் பிந்தி வந்தவனிடம் விசாரித்தான். எப்படி நடந்தது?

        உதட்டைப் பிதுக்கி, உற்றுப்பார்த்து விட்டு, பைக்கை உதைத்து, ஆரன் அடித்து விரட்டிக் கொண்டு பறந்து போனான; தனக்கு விபத்தே வராது என்கிற ரீதியில்……

        எல்லோருக்குமே ஏதோ ஒரு அவசரம் இருக்கிறது, செத்துப் போனவனுக்கும், சாகடித்தவனுக்கும் அப்படி ஏதாவது இருக்கலாம்.

        செத்துப்போனவனின் அவசரமும் அவசியமும் செத்துப்போய் விடுமோ? அது செத்துப் போனவனின் சொத்துபத்தைப் பொறுத்தது.

        இவன் கிடப்பதைப்பார்த்தால் இப்போதைக்கு இவனிடமிருப்பது இது மட்டுமாகத்தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்த என்னை இடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தது தொப்பை வயிற்றுக் காக்கிச் சட்டை…… பேண்ட் பாக்கெட்டுக்குள் ஏதேதோ புடைத்துக் கொண்டிருந்தன…… தொப்பையைப் போலவே

        என்ன நடந்தது? ஏது நடந்தது? எப்படி நடந்தது? எப்போ நடந்தது? இப்படிக் கேள்விகள் எழுந்தன………

        சின்னச் சின்னதாய்ப் பொத்தாம் பொதுவாய் விசாரித்த போதே கூட்டத்தின் கால்கள் முன்னே பின்னே நடந்தனவே தவிர நடந்ததைச் சொல்ல நாதியில்லை.

        வேடிக்கை பார்ப்போம்…… வேடிக்கை மட்டுமே பார்ப்போம்…… என்ற வாடிக்கை கொண்ட நமக்கு விபத்தும் இழப்பும் ச்சுக் கொட்ட வைக்கிற விசயங்களாகவே தான் இருக்கின்றன.

        தற்செயலாகத் திரும்பினேன்…… அங்கே அது இல்லை. அட சற்றுமுன் அங்கே அது கிடந்ததே அதற்குள் எப்படி மாயமாய் மறைந்தது? யார் எடுத்திருப்பார்? அதுவும் விபத்தாய் இருக்குமா!.

        ஏதோ இனம்புரியாத ஏக்கத்தோடு தேட ஆரம்பித்தேன்; என்னுடையது இல்லை; பிறகு எதற்கு எனக்குள் இந்தப் பதட்டம்……

        போனால் போகட்டும் போடா…… என்று விட்டுவிட ஏன் மனமில்லை?

        அதை எடுத்துப் போய் எவ்வளவுகாலம் அதோடு வாழ்ந்து விடப்போகிறான்……? ஏன் இத்தனை அற்பமாய் மனிதன் இருக்கிறான்?

        எல்லோருமே இப்படித்தானா? வாய்ப்புக் கிடைத்தால் வாரிச் சுருட்டுவது வாழ்க்கை தானா?

        அடுத்த வினாடிக்கு உத்தரவாதம் இல்லாமல் தானே இந்த வினாடியை எடுத்து வைக்கிறோம்; அதற்குள் எதற்கு அடுத்தவன் பொருளை எடுத்து மறைக்கும் அவசியம் வந்தது?

        மனம் படபடத்தது...... கண்கள் பரபரத்தன…… தேடினேன்…… தேடினேன் சிரித்தபடியாய் செத்துக் கிடந்தவன் இப்போது முறைத்துக் கொண்டிருந்தான்.

        இப்போது முறைக்கிறானா? முதலிலும் முறைத்தானா? நான் தான் சரியாகப் பார்க்க வில்லையா?

        அப்போது பார்த்தேன்…… அடையாளம் சொல்லும் அளவிற்குப் பார்த்தேன் அங்கே அது கிடந்தது.

        உறுதியாகி விட்டது. எவனோ அடித்துக் கொண்டு போய்விட்டான்.

        வீட்டுக்கு வந்த பின்னும் புலம்பிக் கொண்டிருந்தேன்…… மனசெல்லாம் அதுவாய் இருந்தது; திருடியவன் மனசிலும் அதுதான் இருக்குமோ?

        மனசிருந்தால் திருடுவானா? அதுக்கும் சொந்தக்காரர் செத்துக் கிடக்கம்போது அதைப்போய்த திருடியிருக்கிறானே……

        என் மனைவி கேட்டாள் அது அது என்கிறீர்களே! அது எது?

        கோபமாய்ச் சொன்னேன் - அது, “செத்துப் போனவனின் செருப்பு”.

உயிரின் பயன்......!

கணக்கும் பிணக்கும் எதனால் என்ற
        காரணம் நமக்குத் தெரியாமல்
                கயமைத்தனங்கள் ஒழிவதில்லை!

பணத்தின் மேலே பணத்தைப் போட்டுப்
        பாது காத்தும் பயனில்லை:
                பாடையில் பேதம் ஏதுமில்லை!

பிணத்தின் மேலே பிணத்தைப் போட்டுப்
        புதைத்ததுப் பார்த்தும் முடியவிலலை:
                பூமியில் சவக்குழி மீதமில்லை!

குணத்தில் உயர்ந்த குவலய மாந்தர்
        குழியில் இருந்தும் உயிர்த் தெழுவார்:
                கோபுரம் போலே நிமிர்ந்திடுவார்!

தனக்குத் தனக்கெனும தன்னுணர்வு
        தகர்ந்தால் தேசம் நன்மை பெறும்:
                எனக்கும் உனக்கும் பகை மூட்டம்
                        எல்லாம் இந்தச் சுயநலமே!

மனமே எதற்கும ஆதாரம்
        மாண்புகள் தங்கும கூடாரம்:
                மனமே கனவுகள் நனவாக –
                        மானிடப் பண்பினை வளர்த்துவிடு!

கனக்கும் இதயச் சுமைகளுமே
        கண்ணீர் விட்டால் கரைந்திடுமா?
                உனக்கென உருகும் இதயங்கள்
                        உறுதுணையானால் இடர் வருமா?

அன்பால் உலகை வசப்படுத்து;
        அதனால் உன்னை வளப்படுத்து;
                உன்னால் உலகம் வளமானால்
                        உயிரின் பயனே அதுதானே!

அலங்காரம்

சீவினாள்
சிங்காரித்தாள்
அலங்காரப்பொருளை
அள்ளி அள்ளிப்
பூசினாள்......
அப்படியே இருந்தது -
"அவலச்சனம்"

காந்தியம் வாழியவே!

மகாத்மாவே!
ஞாயிற்றுக் கிழமையில்
உன் பிறந்தநாள் வந்தால்
அடுத்த நாள்
விடுமுறை அறிவிக்க
அரசு ஆணையிட்டால்
"காந்தியம் வாழியவே!"

பிரம்படி

        இதுதான்...... ஓங் கடைக்கு வந்தாலே தொல்லை. எம்புட்டு நேரம் காத்துக் கிடக்கிறது? உனக்கு உன் வேலைதான் முக்கியம்! என்னப்பத்திக் கவலையே படமாட்டியே.....

        பொறுப்பா பொறு...... இன்னும் ஒரே ஒருத்தர்தான், அடுத்து நீதான்.

        என்னமோப்பா...... இன்னிக்கு ஸ்கூல்ல அடிதான் வாங்கப்போறேன்.

        இதோ பாரு...... வேல நேரத்துல சும்மா நய நயன்னு பொலம்பாத ஒரு மனசா வேலையச் செய்யவிடு.

        பய படிப்புல சுட்டி வெளையாட்டு கிளையாட்டுல வெளுத்துக் கட்டுவான், பள்ளிக்கூடத்துல நல்ல பேரு; அதான் அப்படி இப்படிக் கண்டுக்காம விட்டாங்க; போன வரமே P.T.வாத்தியார் மொறச்சார்.

        இன்னிக்கு மாட்டுனா...... பெரிய வாத்தியார் பிரம்புக்கு - ரூல்ஸ்...... ரூல்ஸ் மட்டும்தான் தெரியும்; சமய சந்தர்ப்பம் தெரியாது; பின்னி எடுக்கத் தெரியும்; மன்னிக்கத் தெரியாது.

        எப்போய் எனக்கு நேரமாச்சு...... லேட்டாப்போனா அதுக்குவேற அடிப்பாங்க.

       இந்தா...... இந்தா ஆயிடுச்சுப்பா...... அடுத்து உனக்குத்தான்.

       என்ன முத்துவேலு...... அவசரமா ஊருக்குப் போகனும்...... இன்னும் ½ மணியில் ரயிலடியில் இருக்கணும்...... அந்த ட்ரெயின விட்டா அடுத்து சாய்ங்காலந்தான் ட்ரெயின்; மொத்தப் பொழப்பும் கெட்டுடும்.

       சார்...... ஒரு செகண்ட்ல உங்கள அனுப்பிடுறேன்.

       அப்பா! நான் ஸ்கூலுக்குப் போனும்......
 
       தம்பி சுடல...... எனக்கு தலைக்கு மேல வேல இருக்கு; நீ சாயங்காலமா வாப்பா......

       மூணு நாளா இதையே தான் சொல்லுற.

       சரிசரி இன்னைக்கு முடிச்சிடலாம்...... கவலைப்படாதே;

       வேதனையோடும் வெறுப்போடும் பயந்து பயந்து பள்ளிக்குப் போனான் சுடலை

       அடேய்! அதட்டினார் P.T.வாத்தியார்; மூணு நாள் லீவுல கழுதை மேய்க்கப்போனியா? பெரிய சண்டியர்னு நெனைப்போ! ஏதோ நல்லாப் படிக்கிறியேன்னு விட்டா….. குடுமி பொடனியில பொறளுது...... ரிப்பன் வாங்கிக் குடுக்கவாடா? கேக்குறேன்ல...... உங்கப்பாவுக்கு என்ன வேல?

       சுடலை தயக்கத்தோடு சொன்னான் “சலூன் கடை”, வச்சிருக்கார்...... சொல்வதற்குமுன் அடிவிழுந்தது; பிரம்பு அமைதியாய் அழுதது.

புதுக்கவிதை 2

உலகப்படத்தில்
வறுமைக் கோட்டைத்
தேடினேன்……
அரசியல்வாதி -
இந்திய எல்லைக் கோடுகளைக்
காட்டினான்.

துளிப்பாக்கள் 20

விசாரணைக்கு உரியவர்கள்
விசாரித்துக் கொண்டிருந்தனர்
கூண்டுக்குள் நிரபராதிகள்.

******
ஒப்பனை உணர்ச்சி
காமம் களிப்பு
திரைக்குப் பின்னால் தேசம்.

******
சிலுவைக்குள் சக்தி
சிவனுக்குள் மேரி
பரமபிதாவே ‌இரட்சியும்.

******
கருவறையைத் திற
கடவுளை விடுதலை செய்
ஆண்டவனுக்கு அருள்.

******
கால்களில் காயம்
கைகளில் மருந்து
நிவாரண நிதி.

******
திருடன்
கண்ணில் பட்டது –
“நன்றி; மீண்டும் வருக”.

தொழில்

கடைக்காரன் சொன்னான்
என் பிள்ளைக்கு
இந்தத் தொழில் வேண்டாம்.

விவசாயி சொன்னான்
என் பிள்ளைக்கு
இந்தத் தொழில் வேண்டாம்.

பொற்கொல்லன் சொன்னான்
என் பிள்ளைக்கு
இந்தத் தொழில் வேண்டாம்.

சிரைப்பவன் சொன்னான்
என் பிள்ளைக்கு
இந்தத் தொழில் வேண்டாம்.

வெளுப்பவன் சொன்னான்
என் பிள்ளைக்கு
இந்தத் தொழில் வேண்டாம்.

விலைமகள் சொன்னாள்
என் பிள்ளைக்கு
இந்தத் தொழில் வேண்டாம்.

அரசியல்வாதி சொன்னான்
என் தலைமுறைக்கும்
என் வைப்புகளின் வைப்புகளின்
         வைப்புகளின் வைப்புகளின்
         வைப்புகளின் தலைமுறைக்கும்
         அரசியல் மட்டும் போதும்;
         அமைச்சராய் இருந்தால் போதும்.

ஈழத் தமிழச்சியோ
தன் பெண்வயிற்றுப் பெண்வயிற்றுப்
         பெண்வயிற்றுப் பெண்வயிற்றுப்
         பெண்வயிற்றுப் பெண்வயிற்றுப்
         பெண்வயிற்றுப் பெண்கூட
         புலியாய்ப் பிறக்க வேண்டுமென்றாள்.

உறவுகள்

  ஊருக்கு மட்டும்தான்
     உறவென்ற சொல்லுண்டு,
     உறவுக்காய் அன்பதுவோ
     ஒருநாளும் வாராது

     பேருக்கு முறைசொல்லிப்
     பேச்சளவில் உறவாடும்
     பிறப்புவழிச் சொந்தங்கள்
     பேசாதீர் இனிமேலும்.

     யாருக்கு வேண்டுமிந்த
     ஏமாற்று உறவுகள்?

     யார்யார் மனமெல்லாம்
     அன்புமலர் பூக்கிறதோ,
     பாருக்குள் அவருள்ளே
     பாசத்தின் பந்தங்கள்
     பாங்குடனே வருமன்றோ
     தன்னுயிரைத் தருமன்றோ…!

பந்தபாசம் என்பது
     இரத்த பாசத்தோடு
     கலந்தது;
     வந்தபாசமெல்லாம்
     வாய்வார்த்தையோடு சரி.

அன்பு என்று
     சொல்லிக்கொண்டு
     அலையுது உன் மனசு;
     அன்பு என்று
     சொல்வதெல்லாம்
     அந்தக்காலப் பழசு.

     முன்ன ஒன்னு
      பின்ன ஒன்னு
      சொல்வதுதான் புதுசு;
     முதுகிலதான்
      மொய்க்கும் இந்த
      ஈக்கள் பல தினுசு

மனக்கதவைப்
     பூட்டிவை;
    லாப நட்டக்
    கணக்குப் பார்;
    சுருங்கிப் போ…
    சுகமாய் இரு....

இறைவன் இறங்கி வந்தால்……

இமயம் இறங்கி
இனிய பஞ்சாப்
சமயம் எழுப்பிய
தங்கக் கோவிலைப்
பதமுடன் பார்த்துப்
பரவசம் அடைய
முதலே நினைத்து
முடியும் முன்னே –
அடவோ அங்கே
அகாலிக் துப்பாக்கி
சுடவே பயந்து
தூர நடந்து
குஜராத் வருவான்;

இதயம் குளிர
காந்தியின் மண்ணைக்
காண நினைத்தால்,
காந்தல் கொண்டு
கயவர் பலரும்
சண்டைகள் போட்டுத்
தாக்கிக் கொண்டு
மண்டைகள் உடைந்து
மாண்டது கண்டு
அஞ்சி வருவான்
அஸ்ஸாம் மண்ணே.

பஞ்சாப் போலப்
பாழ்பட் டிதுவும்
கிடப்பது கண்டு
கேவி அழுவான்

மெல்ல இறைவன்
மேலைக் கடலின்
செல்ல விளிம்பைச்
சேர்ந்து நடந்து
சென்னை நகரம்
தெரியும் போது
எண்ணிப் பார்ப்பான்
"எப்படி இருக்கும்?"

முன்பு
கோட்டைகளாய்
இருந்தவை எல்லாம்
பின்பு
மூர்மார்க் கட்டாய்ப்
பிரிந்து
வஞ்சகர் வாழும்
வளாக மாகிப்
பஞ்சாய் நெருப்பில்
எரிந்தது அறியான்
எண்ணிப் பார்ப்பான்
"எப்படி இருக்கும்?"

கண்ணீர்க் கடலில்
கலங்கள் மிதப்பதைக்
கண்டு இறைவன்
கலங்கி நிற்பான்.

அரசியல் வேள்வி
நடத்தும் நாயகர்
உரசிய சந்தனம்
கலந்து ஓடும்
கூவம் நதியில்
குளிப்பவர் கண்டு
பாவம் இறைவன்
பதைத்துப் போவான்.

சோகம் அவனின்
தொண்டையை அடைக்க
வேகமாய் நகரின்
வீதியில் நடப்பான்

தண்ணீர் குடித்துத்
தாகம் அடக்க
எண்ணிக் கமண்டலம்
ஏந்திய கையைத்
தூக்கிப் பார்ப்பான்……
             கைபிடித் துண்டு
             பாக்கி இருக்கும்.
தெற்கே பார்த்தால் –
             ஈழத் தமிழர்
             ஈந்த குருதியால்
             ஆழக் கடலின்
             அலைகள் சிவக்க
             இலங்கையில் ஏற்றிய
             நெருப்பின் நாவு
             இலங்கு விசும்பை
             எட்டி எரிக்கப்
             பாழும் உலகைப்
             பார்த்தது போதும்……
என்றே எண்ணி
ஈசன்
சென்றே விடுவான்
சிவபுரி தானே…!

தமிழ் என் காதலி

கண்ணுக்கு விருந்தான
கற்பகச் சிலையே – உன்
அற்புதம் நான்பாடுவேன் – பெண்ணே
அற்புதம் நான்பாடுவேன்.

கற்பனை வடிவான
காரிகை உன்னழகை
எப்படிக் கவிபாடுவேன் – பெண்ணே
எப்படிக் கவிபாடுவேன்.

சேயிழை உன்னழகைச்
செப்பிட நானென்ன
கம்பனின் அவதாரமா? – பெண்ணே
கம்பனின் அவதாரமா?

கூந்தல் அசைந்தாடக்
குறுநகை புரிந்தேநீ
நெஞ்சத்தைத் தாலாட்டுவாய் – பெண்ணே
நெஞ்சத்தைத் தாலாட்டுவாய்.

மாதுளை நிறமொத்த
மாங்கனி உனையென்று
மஞ்சத்தில் நீராட்டுவேன்? – பெண்ணே
மஞ்சத்தில் நீராட்டுவேன்?

உன்முகம் பார்க்கின்ற
ஒவ்வொரு நொடிப்போதும்
என்னுயிர் பறந்தோடுதே – பெண்ணே
என்னுயிர் பறந்தோடுதே.

பார்வையில் பகலாகி
ஆசையின் கனவான
ஆனந்த விடிவெள்ளிநீ – பெண்ணே
ஆனந்த விடிவெள்ளிநீ.

பயணத்தில் நான்பார்த்த
பாவையர் பலருள்ளும்
தேவதை நீதானடி – பெண்ணே
தேவதை நீதானடி.

தேவியே உன்காதல்
தேங்கிய என்நெஞ்சில்
நீயொரு பெண்பெட்டகம் – பெண்ணே
நீயொரு பொண்பெட்டகம்.

சுந்தரத் தமிழேயென்
நாவினில் நீயிருந்து
களிநடம் புரிவாயடி – பெண்ணே
களிநடம் புரிவாயடி.

எதனாலே?

ஒவ்வொரு அசைவிலும்
ஒருசில பூக்கள்
உதிர்வது எதனாலே?

           உயிரில் கலந்த
           மணத்தைப் பிரிந்த
           வாட்டம் அதனாலே…!

பிரிவது அறியாப்
பெண்ணே உனக்குப்
பிரியம் எதனாலே?

             அழகும் மணமும்
             அருகருகிருக்கும்
             அற்புதம் அதனாலே…!

நாரே நீயும்
தலையில் இருந்து
நடிப்பது எதனாலே?

             நறுமலர் தன்னை
             நயமுடன் கோர்த்த
             நளினம் அதனாலே…!


சிதறிக் கிடக்கும்
பூக்கள் மெல்லச்
சிரிப்பது எதனாலே?

             சிகையெனும் சிறையில்
             சிக்கிக் கிடந்த
             சிரமம் அதனாலே…!

விடுதலை என்பது
கெடுதலையாகிற
விசமம் எதனாலே?

             விழுவதை மிதிக்கும்
             பெண்ணே உந்தன்
             கால்கள் அதனாலே…!

சினிமா

கூழுக்கு வழியில்ல
குருபார்வ சரியில்ல
பாலுக்குப் பிள்ளையழ
படத்துக்குப் போவாக.
              சினிமாக் கொட்டகையில்
              சிலுக்கு ஆடுறத
              துணியே இல்லாம
              சுமீதா குளிக்கிறத
              ஏழாம்தரம் பார்க்க
              எடமே கெடைக்காம
              தவியாத் தவிக்கிறது
              தாத்தா மனசுங்க.

ஏசு படத்துக்கும்
“ஏ” முத்திரை
இருந்தாத் தான்
எங்க ஊர்ப் பாதிரியார்
எட்டிப் பாப்பாரு.
              ருக்குமணி ருக்குமணி
              அக்கம்பக்கம் என்ன சத்தம்?
              சின்ன சின்ன ஆசைகளைச்
              சீரழித்தது இந்தச் சத்தம்.

வெக்கம் கெட்டவங்க
வெத்துடம்பப் பாத்துருகிச்
சொக்கிக் கிடந்தவங்க
சொப்பனம் கண்டாக.
            மணி ரத்தினம்
            வைரம் முத்தென்று
            கொட்டிக் கொடுத்தோமே……
            ராமா! நாராயணா!

அடுத்த தலமுறைக்கு
ஆபத்து இல்லாம
எடுக்கும் படமெல்லாம்
இனியிருக்க வேணுமப்பா.

("ரோஜா" - படம் பார்த்ததும் எழுதியது)

காத்திருக்கிறாள்……

இவள் காத்திருக்கிறாள் –
பொருளாசையே இல்லாத
புத்தனுக்காக அல்ல;

திருமணம் என்பதனைப்
புரிந்து கொண்ட
திருவாளனுக்காகக்
காத்திருக்கிறாள்……

சீர்வரிசையே
கேட்காத
சீராளனுக்காகக்
காத்திருக்கிறாள்……

தங்கத்தைப் பெற்று,
தங்கமாய் வளர்த்து,
கன்னிகாதானம் தரும்
பெற்றோரிடம்,
தங்கம் கேட்காமல்
தங்கவரும்
தங்கமனம் பெற்ற ஒரு
தங்கத்திற்காகக்
காத்திருக்கிறாள்……

முல்லை அவளுக்குத்
தன்னையே தேராக்கும்
பாரி ஒருவனுக்காகக்
காத்திருக்கிறாள்……

ஒரு பேகனின் போர்வையில்
அவனோடு தானும்
போர்த்திக் கொள்ள
இந்த மயில்
இன்னும் காத்திருக்கிறாள்……

ஏதுக்குப் பெண் பெற்றாய்?

ஓம்பொன்னு
சமஞ்சாளா?
உறுப்படியாச்
சமைப்பாளா?
ஏம்பையன் நிறத்துக்கு
எடுப்பா இருப்பாளா?
ஆணழகன்
என்பதனால்
அவன் கொஞ்சம்
கருப்பு தான்;
மீனழகி
நிறமென்ன
எலுமிச்சம் பழம் தானே!
அதுக்கே தரவேணும்
அறுபது சவரன்தான்;
இதுக்கே பயந்தாக்க
ஏதுக்குப் பெண் பெற்றாய்?

துளிப்பாக்கள் 19

உள்ளே ஒன்று
வெளியே ஒன்று
வாழ்த்தியது வாய்.

******
ஏதேதோ சொன்னான்
பாசாங்கு செய்தான்
எதிர் முனையில் எவரோ!

******
புன்னகையும் கண்ணீரும்
ஆயுதங்கள் ஆயின
காயப்பட்டதோ காதல்.

******
அபாய அறிவிப்பு
எச்சரிக்கையாய் இருங்கள்;
தேர்தல் வருகிறது.

******
கோடம்பாக்கத்தில் தொடக்கம்
கோட்டையில் முடிவு
சினிமாக் கனவு.

******
பழைய பாயைப்
பாதியாய்க் கிழித்தனர்
பாகப்பிரிவினை.

பகட்டு

பட்டாடை பளபளக்க
சரம் சரமாய்  நகை பூட்டி
மாமிசமலை
மதர்ப்பாய் நடந்தது
மண்ணதிர......
ஒப்பனை இல்லாத
இயற்கை அழகின்
இதழோரப் புன்னகை
ஏளனம் செய்தது
 மெதுவாக.

ஆசிறியர் ஆசிரியராக......

அறியாமை இருளகல
அவதரித்த ஆன்மாவே!
நெறியான வழிநீயும்
நின்றொழுக வேண்டாவா!

தெய்வதமே தொழத்தக்க
தெய்வீகம் உனக்குள்ளே
நெய்தீபம் போல்நெஞ்சில்
நின்றெரிய வேண்டாவா!

கையளவு கற்றதிலே
காலளவு கற்பிக்கும்
கடனறிந்து கொண்டுதினம்
கற்றறிய வேண்டாவா!

வழிகாட்டும் விழியாக
விழிபேசும் மொழியாக
ஒளிதீபம் நீயாக
வலியறிய வேண்டாவா!

விதையே நீயாகி
விதைகளுக்குள் விதைக்கின்ற
வித்தையினை நீயறிந்து
வினைசெய்ய வேண்டாவா!

நீயறிந்து கொண்டதனை
நேர்படவே அறிவிக்கும்
நேர்த்தியினை நீயறிந்து
நேர்படவும் வேண்டாவா!

மாணவனே நீயாகி
மாணவனே ஆசானாய்
மனப்பாடம் செய்தேநீ
மாண்புறவும் வேண்டாவா!

வீணே பொழு‌‌தோட்டி
வெறுங்கதைகள் பேசிதினம்
நீனே இருக்கின்ற
நிலைமாற வேண்டாவா!

சாகாத இலக்கியத்தின்
சரித்திரமாய் எந்நாளும்
ஆசானே நீநின்று
அருள்புரிய வேண்டாவா!

ஆதாரம் நீயாகி
அவதாரம் தானாகி
தீயோரும் தொழத்தக்க
திருவாக வேண்டாவா!

(நல்ல ஆசான்களுக்கு மட்டும் நல்வாழ்த்துக்கள்)

சிகிச்சை

என்
நம்பிக்கை இலைகளை
உதிர்த்தபடி
காற்று……
மழை……
இடி……
மின்னல்……
நெருப்பு……

என்
உயிர் இலையின்
ஒற்றை ஓவியத்தை
எழுதப் போகும்
ஓவியனைத் தேடும்
காயப்பட்ட கண்கள்.

வெளிச்சம்

காயப்பட்ட கண்களில்
காணாமல் போனது காட்சி
கசியும்
கண்ணீர்த் தாரைகளில்
கரைந்தது கனவு;

விளிம்பில் நின்றபடி
விசனப்பட்டது
வாழ்க்கை;

தடயங்களைத் தேடித்
தடவிய கைகளில்
தைரியம் தந்தது
மனசு;

காலத்தின் கல்லறையில்
கண்சிமிட்டும்
வெற்றியின் வெளிச்சம்.

துளிப்பாக்கள் 18

கிராமத்து வீட்டில் ஆளில்லை;
கிணற்றுத் தவளைக்கு நீரில்லை;
அமைதியாய் அழுதது ஆகாயம்.

******
குருவியின் கூடு
குடியிருந்தது கூகை
ஆணையிட்டது அமெரிக்கா.

******
தட்டேந்த வில்லை
தவமிருக்க வில்லை
தாராளமயம் வேண்டாம்.

******
புத்தகக் கடை
விற்றுத் தீர்ந்தன
பீடி, சிகரட்.

******
உச்சி வெயில்
தண்ணீர்ப் பழம்
தாகம் தீர்த்தன ஈக்கள்.

******
எங்கே எதற்குப் பயணம்
ஏதும் அறியாது விழிக்கும்
லாரியில் அடிமாடுகள்.

******
வேசம் போட்டார்கள்
கோசம் போட்டார்கள்
வினாவாய் விடியல்.

புதுக்கவிதை

ஒருபானைச் சோற்றில்
ஒன்றுவிடாமல்
பதம் பார்த்ததில்
வெந்துபோனதோ
விரல்கள்.

துளிப்பாக்கள் 17

தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
டாஸ்மாக் விளம்பரம்.

******
“நேரகாலம் சரியில்லை”
எப்படி இருக்கும்?
இப்படி இருந்தால்.

******
மூச்சைப் பிடி
மூளையைக் கசக்கு
முயன்று உழை.

******
முடவன் எடுத்தான் கொம்புத்தேன்
முட்டாள் இழுத்தான் முதுகில்த்தேர்
முயற்சியை முறைப்படுத்து

******
அழவும் இல்லை
சிரிக்கவும் இல்லை
ஆண்டவனிடத்தில் அசைவேயில்லை.

******
தொழுதான் துடித்தான்
உண்டியல் நிறைத்தான்
கல்லாய் இருந்தான் கடவுள்.

முத்தம்

உன்
அன்பு வானை
முத்தமிட
என்
இதயநிலா
வட்டமிடும்;
         முத்தங்களோ –
           உன் பாதங்களில்……
எனக்கு
உன்
கால்களும்
கன்னங்களும்
ஒன்றுதான்.

துளிப்பாக்கள் 16

தீபம் எரிந்தது
திசைகள் மறைந்தன
திகைப்பாய் இருந்தது.

******
விரிந்த வானம்
தெரிந்த வாழ்க்கை
சின்னச் சின்னத் தேடல்கள்.

******
தூண்டிலை விடு
வலையை எடு
மொத்தமாய்ப் பிடி.

******
பூவா தலையா
போட்டால் தெரியும்
ஐ.நா. சபையின் தீர்மானம்.

******
வாய் வசைபாடியது
கை எழுதியது
ஸ்ரீ ராம ஜெயம்.

******
வீடு மாறினேன்
மாடி ஏறினேன்
கூடு மாறுமா குருவி / குயில்.

சிலைகளின் கண்ணீர்

அதோ
    அங்கே ஒரு சிலை……
    அருகில் சென்று பார்க்கிறோம்;
    அடவோ……
              சட்ட அறிஞர்
              அம்பேத்கரின்
              அற்புதச்சிலை!
    மாலை அணிவித்து
    மரியாதை செய்தோம்
    அடியில் பார்த்தால்……
               அந்தச் சிலையை
               அன்று நாட்டிய
               அத்தனை பேரும்
               அவரது குலம் என்று
               அடிக்குறிப்பு இருக்கிறது.
செக்கிழுத்த செம்மல்
     சிலையாக நிற்கிறார்;
     சிரித்துக் கொண்டே
     அருகில் செல்கிறோம்……
                இவரது சிலையை
                இங்கே நாட்டியோர்
                வேளாளர் குலம் என்று
                வெட்டியிருந்தார்கள்.
கல்விக் கண்திறந்த
     கர்மவீரர் காமராசரை,
     உறவின்முறை மட்டுமே
     உரிமை கொண்டாடுகிறது.
முச்சந்தி ஒன்றில்
     முக்கால் அடி உயரத்தில்
     முளைத்திருந்தது……
                பசும்பொன் திருமகனின்
                பகட்டான சிலை;
     அதனைச் சுற்றி
     அத்தனை பேரும்
     முக்குலத்தோர் என்று
     முத்திரை வாசகம்
     முன்மொழிந்தது.

     அதிர்ந்து போனோம்
     அத்தனை சிலைகளும்
     அவரவர் சாதியின்
     அடையாளச் சின்னமாய்……
                 அவமானப் படுத்திவிட்டதாக
                அத்தனை மகான்களும்
                அழுது கொண்டிருக்கிறார்கள்.
                தொழுது உங்களைக்
                கேட்டுக் கொள்கிறேன் –
     தன்னலமில்லாத்
     தங்கத் தலைவர்களை
     மட்டுமாவது
     சாதிச் சாக்கடையில்
     புதைத்து வீடாதீர்கள்.

துளிப்பாக்கள் 15

கண்ணாடி காதுக்கருவி
கட்டாயம் வேண்டும்……
குருடாய்ச் செவிடாய்ச் சாமிசிலைகள்.


******
சிறப்பு மருத்துவர்கள்
சீக்கிரம் வரட்டும்
சவக்கிடங்குகளில் சாமிசிலைகள்.


******
காசு காசு
எல்லாத்துக்கும் காசு
இலவச மருத்துவ மனை.


******
வயிறு எரிந்தது
வாழ்க்கை எரிந்தது
காடு எரிந்தது.


******
சுற்று வீடுகளில்
தொலைக்காட்சித் தொடர்கள்……
இடையில் ஒரு இழவுவீடு.


******
நாளை தேர்வு
நானா எழுதுகிறேன்
அலறும் தொலைக்காட்சி.

பொன்மகள் வந்தாள்

செல்லப் பிள்ளை
பிறந்து விட்டாள்
தங்கக் கட்டி போல – அட
சொல்லிச் சொல்லி
வளர்த் தெடுப்பேன்
சொக்கத் தங்கமாக.

அச்சம் நாணம்
என்பது எல்லாம்
அடவோ நமக்கு வேண்டாம் – அட
எச்சில் விழுங்க
அனுமதி கேட்கும்
பத்தாம் பசலி வேண்டாம்.

சமைக்கிற வேலை
செய்வது மட்டும்
சாதனை என்பது வேண்டாம் – அட
இமைக்கும் பொழுதில்
எதையும் வெல்லும்
இதயம் உனக்கு வேண்டும்.

மிச்சம் மீதி
இருந்தால் உண்டு
காயும் சருகாய் வேண்டாம் – அட
உச்சம் உனது
உயர்வே என்று
உணர்த்தும் உஷ்ணம் வேண்டும்.

ஆணும் பெண்ணும்
சரியே என்னும்
சரித்திரம் சமைக்க வேண்டும் – அட
பூணும் வெற்றியில்
புவனம் சிலிர்க்கப்
புரட்சி பாட வேண்டும்.

காணும் யாவும்
கைவச மாக்கும்
கலைகள் கற்க வேண்டும் – அட
வானும் மண்ணும்
உனக்குள் அடக்கி
வாழிய செல்ல மகளே!

சுதந்திரம்

இன்று
சுதந்திர தினம்.....
இந்த தேசத்தைப் போலவும்
அதன் சுதந்திரத்தைப் போலவும்
என் ஆடையைப் போலவும்
கசங்கிக் கிழிந்த தேசியக்கொடி இருக்கிறது
ஊசி தாருங்கள்
கொடி குத்த அல்ல
கிழிசல்களைத் தைக்க.

இந்தியா

இனிய தமிழ் ரசிகர்களுக்கும் தங்கள் வாசிப்பால் என் எழுத்துக்களை சுவாசிக்கச் செய்யும் வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளுடன் இனிய
சுதந்திர தின வாழ்த்துக்கள்.

(இக்கட்டுரை சுதந்திரப் பொன்விழா மாநில அளவிலான போட்டியில் முதல்
  பரிசு பெற்றது.)


துளிப்பாக்கள் 14

நாங்கள் சோசலிஸ்டுகள்
எங்களுக்கு எல்லோரும் சமம்
அணிமாறுவோம்; கொடி மாறாது.

****** 
அஞ்சமாட்டோம் – எவரையும்
கொஞ்சமாட்டோம் – ஜனநாயகம்
எங்கள் கையில்.

****** 
உங்கள் குழந்தைக்குப்
போஷாக்குக் கொடுங்கள்’
வளரவேண்டாமா? – “விலைவாசி” போல.

****** 
கஜானா காலியா
கவலை வேண்டாம்
அச்சு இயந்திரம் ஆளுக்கொன்று.

****** 
கனவு காணுங்கள்
இலவசமாய்த் தருகிறோம்
தூக்க மாத்திரைகள்.

****** 
ஏரோப்ளேன் ஏறுவோம்
அமெரிக்க அல்வா தின்போம்
எகிப்தில் ஏப்பம் விடுவோம்.