துளிப்பாக்கள் 22

வழி தெரியவில்லை
கொன்று  விட்டேன்
செத்துப்போன சித்தப்பாவை.

பந்தா

   டேய்....போடா போ.... அவன்லாம் ஒரு ஆளுன்னு அவங்கிட்டப் போயி.... அவன் தரத்துக்கும் தண்டிக்கும் நம்மெல்லாம்.... போடா.... போடா.... பந்தாப் பாண்டியன் பேச்சிலும் முகத்திலும் அலட்சியம் கொப்பளித்தது.

     எப்போதும் எதிலும் எகத்தாளம்.... எக்களிப்பு.... இவையே பாண்டியனுக்கு பந்தாபாண்டியன் பட்டத்தை வாங்கிக் கொடுத்துவிடவில்லை....

     தேவாரம் சுத்துப்பட்டு கிராமங்களில் அவனுக்குக் கொஞ்சம் சொத்துப்பத்து இருந்தது.... நேரகாலம் கூடிவர, நல்ல சம்பந்தம்.... உறவுமுறை.... நட்பு வட்டாரம்.... அரசியல் அறிமுகஙகள் என்று அந்தஸ்து கூடிக்கொண்டே இருந்தது....

     நடை உடை பாவனைகளில் மிடுக்கும் மெருகும் சேர்ந்து சேர்ந்து அவனை பந்தாப்பாண்டியனாய்ப் பறைசாற்றின....

     பந்தாவில் மிதந்து கொன்டிருந்த பாண்டியன், அதைத் தக்க வைத்துக் கொள்ளும் ப்ரயத்தனத்தில், சில பல சிபாரிசுகளைச் செய்து தன்னை அடுத்த தளத்துக்கு ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்தான்.

     முருகபூபதி தன் மகனுக்கு ஐ.டி.ஐ. சீட் வாங்கித் தரும்படி பாண்டியன் வீட்டுக்குப் படை எடுத்தான்.... தலையைச் சொறிந்தபடி தவம் கிடந்தான்....

     தொண்டையைக் கனைத்தபடி பாண்டியன் பேசி முடித்து, அலை பேசியை அணைத்தபடி பூபதியிடம் தொடர்ந்தான்.... ''கவலப்படாத.... ஓம்பையன் மார்க்குக்கு, மாடு மேய்க்கக்கூட லாயக்கில்லன்னாலும்.... நாஞ்சொன்ன பெறகு மறுப்பாங்களா? சீட் தாரேன்னுட்டாங்க.... புதன் கிழம போய், பீசக்கட்டி சேத்துக்க....''

     பூபதி நன்றியோடு கையெடுத்துக் கும்பிட்டு,மகனை அதட்டினான் - ''டேய்! ஐயா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குடா....!''

     388 மார்க்குக்கு பாலிடெக்னிக் சீட்டே ஈசியாக் கிடைக்கும் என்கிற விபரம் பூபதிக்குத் தெரியாததால்தான் பாண்டி மாதிரி ஆள்கள் பந்தாப் பாண்டியன் ஆகிறார்கள்....

     ஏங்க....அவனைத் தெரியும்.... இவனைத் தெரியும்னு யார் யாருக்கோ எது எதுக்கெல்லாமோ சிபாரிசு கிபரிசுன்னு ஊர்ச்சோலி பாத்துக்கிட்டுக் கிடக்கீங்க.... நம்ம பிள்ளைக்கு ஒரு +1 சீட் வாங்க முடியல.... அப்பனா அக்கறையா பஸ்ட் குரூப்ல, சேலம் நாமக்கல் ஏரியாவுல, ஒரு சீட் வாங்கப் பாருங்க.... கண் கலங்கினாள் கனகா.....

     கடைசி நேரத்தில் சங்கரா சங்கரான்னு அடித்துக் கொண்டு பகீரதப் பிரயத்தனப் பட்டதில், தட்டுத் தடுமாறி 10ம் வகுப்பு பாசாகியிருந்தான் பாண்டியன் மகன் பாரதிபாஸ்கர்.

     மகனின் மார்க் சீட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த பாண்டியனுக்குப் பெரிய கும்பிடு போட்டான் முருகபூபதி.... ''சாமி...! ஏ மூணாவது பொண்ணு 467 மார்க் வாங்கி பத்து பாசாகிட்டா.... எங்கயாவது....  ஏதாவது.... சேத்து விடுங்க சாமி....''

       பந்தாப் பாண்டி, மகனின் 202 மார்க்கில், வெக்கப் பாண்டியாய்த்  தலையசைத்தான்.

ஞானம்

      அம்மா கட்டாயப் படுத்தியதால் வேண்டா வெறுப்பாக ஜி.ஹெச். வாசல் வரை வந்தவன் உள்ளே போகத் தயங்கினான்.
     மூக்கை மூடிக் கொண்டு அருவருப்பாய் முகத்தைச் சுளித்தபடி வந்து, ஒப்புக்கு நின்று, ஒன்றும் பேசாமலேயே திரும்பி விட்டான்.
     அப்பாவுக்கு ஆப்பரேசன்.... பக்கத்திலிருந்து பார்த்துக் கொள்ள லீவு கிடைக்காது என்று சாக்குச் சொன்னான்.
     அம்மா கிடந்த கிடப்பும், அவர்கள் தவித்த தவிப்பும் ஒன்றுமே செய்யவில்லை இவனை.
     அம்மாவின் பிரியத்துக்குரிய பிள்ளை, இப்படி ஜடம் மாதிரி இருக்கானே என்று அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஆச்சரியப் பட்டார்கள்.
     மனைவியாய் வாய்த்த மகராசிக்கு நல்ல ஆரோக்கியமான உடம்புதான்.... பல் வலி மட்டும் சிப்ட் முறையில் சித்ரவதை செய்யும்.
     எப்போதும் போலவே தானுண்டு தன் வேலை உண்டு என்று காரியத்தில் கண்ணாய் இருப்பான் பிரகாஷ்.
     போன வாரம் தாய்மாமன் சாவுக்குப் போய்வந்த சுமதிக்கு,தலைவலியும் காய்ச்சலும் அந்தப்பாடு படுத்தியது.... அமிர்தாஞ்சனைத் தடவிக் கொண்டே வீட்டு வேலையையும் கவனித்ததை இவன் கண்டு கொள்ளவே இல்லை.
     முந்தாநாள் இரவு  இவனுக்குக் குளிர் காய்ச்சல் வந்து, உடம்பு குதியாய்க் குதித்தது... மனசு தவியாய்த் தவித்தது.... யாராவது பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொள்ள மாட்டார்களா என்று பரிதவித்தான்.
     'இப்படித் தானே மத்தவங்களுக்கும் இருக்கும்', என்ற ஞானம் பிறந்தது. இனிமேல் வீட்டில் யாருக்காவது சுகமில்லை என்றால் அக்கரையோடு பார்த்துக் கொள்ள வேண்டும், என்று தீர்மானித்தான்.
     ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமலேயே பல்லக்கில் பயணித்தான்.                                                                       

அப்பத்தாவின் ஆசை

     எங்கள் ஊர், முல்லையும் மருதமும் கலந்த, செழிப்பான கிராமம். இதற்கென்று சில நியதிகளும்,வரையறைகளும், இருக்கின்றன; சில வழக்கங்களையும், வாடிக்கைகளையும் இவர்கள், காலம் காலமாய் வழிமொழியும்படிக்கு, முன்மொழிந்தது யாரோ....!

     என் பாட்டி வெள்ளச்சி மாதிரி காது வளத்த பொம்பளைங்கள இப்பெல்லாம் பாக்க முடியுறதில்ல...எனக்குச் சின்ன வயசுல தோணாத ஒரு சந்தேகம் இப்பத் தோணுது.... எங்க குடும்பம் இருந்த இருப்புக்கு, மூக்குத்தி போட்டுக்கவே துப்பில்லாத லட்சணத்துல, தங்கத்துல தண்டட்டி போட வழியேது...? காதுல இரும்பு வளையம் போட்டிருப்பாளோ....!

     காலம் காலமா, எங்க சாதி சனங்க, ஏதிலிகளாத் தட்டழிஞ்ச சங்கதிய, வெள்ளச்சி, கதைகதையாச் சொல்லக் கேட்டு, புரிஞ்சும் புரியாமலேயே 'உம்' கொட்டிய பால்ய வயது நாள்கள், இப்போதும் ஆணி அடித்த மாதிரி அடிமனசுல ஈரம் கசிஞ்சு கெடக்கு....

     வெள்ளச்சி, அடிக்கடி சொல்லிக்கிட்டே கெடக்கும்....ஏ ராசா...! ஓங் காலத்துலயாவது, அது நடக்கணும்....ஆத்தா செல்லாண்டியம்மன ஆயுசெல்லாம் வேண்டிக்கிட்டது வீணாகாது....

     ஏலே முனியாண்டி.... அப்பத்தா செத்துட்டாலும், ஆகாசத்துல இருந்து பாத்துக்கிட்டேதான் இருப்பேன்....

     நானும், மொளைக்காத மீசைய முறுக்கி, வீராப்பா சவால் விட்டதுண்டு.... என்னைப் போலவே, வெவரம் தெரியாத காலத்துல, எத்தனையோ சவால்களை எல்லாரும்தான் செஞ்சிருப்பாக....

     ஆளான பிறகு, அத்தனையும் மறந்து, அன்றாடப் பொழப்புக்கே அல்லாடுற   போது, சின்ன வயசு நெனப்பெல்லாம் செல்லரிச்சுப் போயிடும்.

     எனக்கு நினைவிருக்கிறது....பாட்டி சொன்ன அத்தனை கதைகளின் வலியும் ரணமும், அச்சு அசலாய் நினைவிருக்கிறது....சொல்லப் போனால்.... பாட்டியின் மரணத்திற்குப் பிறகு என் நினைவு அடுக்குகளில் நிரந்தரமாய் இருப்பது அந்த ஒன்றுதான்....

     இப்போதெல்லாம் எங்கள் ஊர் முன்பு போல் இல்லை.... மாறிவிட்டதா...? இல்லை.... மறந்துவிட்டார்களா....? மறதிதான் என்றால், மறந்தது _ அடக்க வேண்டியவர்களா...? அடங்க வேண்டியவர்களா....?

     எது எப்படியோ.... நான் மறக்கவில்லை.... வெளியில் கிளம்பி, காலில் ஷு மாட்டுகிற போதெல்லாம் பாட்டியின் வடு நிழலாடும்....

     ''ஊர் எல்லையில மிதியடியக் கழட்டாம, மேல் சாதிக் காரங்களப் போலவே, நாமளும் வீட்டு வாசல்ல கழட்டுற காலம் வரணுமப்பா...!'' 

கரன்சி நோட்டில் காந்தியார் சிரிப்பதேன்?

நான்
மோகன்தாஸ் கரம்சன்
நேரு பேசுகிறேன்....

என்னை,
காந்தி என்று சொல்லிக்
கேவலப் படுத்தவேண்டாம்.

இந்த மண்ணில்
யார் யரையோ
அன்னை என்று சொல்லிவிட்டு
என்னைத் தந்தை என்று
அவமானப் படுத்தாதீர்கள்.

எச்சிலைத் தொட்டுத் தொட்டு
என் முகத்தில் ஒட்டி ஒட்டி
பணத்தை எண்ணுவீங்க...
என்னை,எண்ண மாட்டீங்க...

கட்டுக் கட்டா நோட்டு வச்சு,
பெட்டிக்குள்ள போட்டு வச்சு,
கட்சிக்குள்ள கூட்டு வச்சு,
ஓட்ட எண்ணுவீங்க.... பிறகு...
நோட்ட எண்ணுவீங்க...

எண்ண வேண்டியத எண்ண மாட்டீங்க...
பண்ண வேண்டியதப் பண்ண மாட்டீங்க...

எனவே....

கோட்சே....!
மீண்டும் நீ பிறந்து வா...

கைத் துப்பாக்கி இல்லையே என்று
கவலைப் படாதே....

இந்தியாவின் ஆயுதக் கிடங்கு
இலங்கையில் இருக்கிறது....
'புத்தம் சரணம்' என்று சொல்....
புரிந்து கொள்வார்கள்;

ஏ.கே.47 எடுத்துக்கொள்....
இன்னொரு சத்திய சோதனை எழுது...

என்ன பார்க்கிறாய்?
அகிம்சையைத் துறக்க வேண்டிய
அவசியம் வந்து விட்டது;

      இந்தியா இரை போட்டது 
      ராஜ பச்சி எச்சமிட்டது 
      அசோகச் சக்கரத்தில். 


அந்தப் பச்சியைச் சுடு...
குறி பார்த்துச் சுடு.

கச்சத் தீவில் கால் வை...
இந்திய தேசியக் கொடியைப் பறக்க விடு...

தமிழகத்தின் தறுதலைகளைத்
தவறாமல் சுடு.

நீ சுட வேண்டிய காந்திகள்
நிறைய இருக்கிறார்கள்....
கவனமாய்ச் சுடு....
புனிதம் பெறு....
மகாத்மாவாய் இரு....

ஹா ... ஹா....ஹா...
காந்தி, ஏன் சிரிக்கிறேன் தெரிகிறதா?
ரணம் புரிகிறதா? 

இடியாப்பம்


     வெள்ளை நூலைப் பிரித்துப் போட்டது மாதிரி,அரிசிக்கு  அத்தனை அற்புதமாய்  வடிவ மாற்றமும்,சுவை நேர்த்தியும் செய்து கொடுத்த முதல் தாய்க் குலத்தின் வளைக் கரத்துக்கு வைர வளையலே பூட்ட வேண்டும்தான்.

     பச்சரிசியை ஊறவைத்து, கொஞ்சமாய்த் தண்ணீர் விட்டு, ஆட்டுக்கல்லில் கடகட என்று ஆட்டத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாய் அரிசி அரைபட அரைபடக் கெட்டிப்பட்டு, செக்காட்டுகிற பிரயத்தனத்தில் இடுப்பும் கையும் நோவெடுத்து உடம்பு ஒரு வழியாகிவிடும்.

     இவ்வளவு கஷ்டப்பட்டு இந்தக் கழுதயத் திங்கணுமா? 'பேசாம சோத்த ஆக்கித் தின்னுட்டுச் சுகமா இருக்கலாம் தானே',என்ற அங்கலாய்ப்பு அம்மாவுக்கு மட்டும் வருவதே இல்லை.

     ஆட்டிய மாவைப் பக்குவமாய் வதக்க வேண்டும்;பக்குவம் தவறிப் போனால் பிழிய வராது; வெந்தபிறகும் கல்லாய் இறுகிப் போகும்.

     நோகாமல் T V பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் காலாட்டிக் கொண்டே சாப்பிட உட்காரும் அப்பா திட்டித் தீர்ப்பார்.... ''உனக்கு எதுக்குடி இந்த வேண்டாத வேல....? இது இடியாப்பமா....? பாறாங்கல்லா இருக்கு....'' என்று சிடுசிடுப்பார்.

     தான் சாப்பிடும் போதுதான் அம்மாவுக்கும் அதே எண்ணம் வந்து, இறுகிப் போன காரணத்தை ஆராய்ச்சி செய்வார்.

     முற்றிய தேங்காயை ஆட்டிப் பிழிந்து ஏலக்காய் பொடித்துப் போட்டு சீனியும் சேர்த்துத் தேங்காய்ப் பாலில் சாப்பிடும் போது, இடியாப்பம் ஈடு இணையற்ற சுவையாய் இருக்கும்.

     வெங்காயம், பச்சைமிளகாய் வெட்டிப் போட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, இடியாப்பத்தைத் தாளிதம் செய்தால், அந்தச் சுவைக்கு இன்னொரு வயிறு கட்டாயம் வேண்டும்.

     கோழிக் குருமா இருந்துவிட்டால், எனக்கு உனக்கு என்று அடிதடியே ஏற்ப்பட்டு விடும்.... பிறகு இத்தனையும் செய்து கொடுத்த அம்மாவுக்கு.... பழைய சோறுதான் மிச்சமிருக்கும்.... அதுவும் இல்லாத பட்டினிப் பொழுதுகளைப்  பட்டியலிட்டபடி அம்மா மனசு ஆறுதலடையும்.

     இந்த இயந்திர உலகத்தில் இடியாப்பம் எளிதாகி விட்டது; அரிசியைப் போட்டால் இடியாப்பமாத் தர இயந்திரம் வந்து விட்டது; இன்ஸ்ட்டன்ட் இடியாப்பம் கிடியாப்ப மெல்லாம் கிடைக்கின்றன....

     பாட்டி பார்த்துப் பார்த்துச் செய்த பக்குவங்களை, பண்டிகை நாள்களில் பட்ட பாடுகளை, பரிதவிப்புக்களை,கதை கதையாய் அம்மா  சொல்லச் சொல்லக் கேட்டு வளர்ந்த பேத்திக்குப் பாட்டியின் மீதான மதிப்பும் மரியாதையும், பாசமும் பரிவும் இடியாப்பம் மாதிரிப் பின்னிக் கிடந்தன....

     ஒரு விடுமுறை நாளில், தானே போராடி மிக அற்புதமாய்  இடியாப்பமும் தேங்காய்ப் பாலும் செய்து, பக்கத்து ஊரில் இருந்த பாட்டி வீட்டுக்குத் தன் டூவீலரில் போனாள் அமுதா....

     பேத்தியின் கன்னங்களைத் தடவி ஆரத் தழுவினாள் பாட்டி.....

     உங்களுக்காக நானே இடியாப்பம் செஞ்சு கொண்டாந்திருக்கேன் அம்மாச்சி!

     ஏண்டிம்மா...எனக்கு சக்கர வியாதி... சீனி, தேங்காப் பாலெல்லாம் தொடவே கூடாது.... இருந்தாலும் பரவாயில்ல.....ஒங்கையால செஞ்சதச் சாப்பிடக் கொடுத்து வச்சிருக்கணும்....

     அமுதாக்கண்ணு மிக்சியில ஒரு அடி அடிச்சு கூழா ஒரு கிளாஸ் குடுக்குறியாடா....?

      இடியாப்பத்தோடு அமுதாவும் அரைபட்டுக் கொண்டிருந்தாள்.... 

     கரண்ட் கட்டானது.

இன்னும்....

காற்றில் கலந்து
காணாமல் போன
வாயைக் கடந்த
வார்த்தைகள் போலப்
போய்விட்டாய்.....

புயல் கடந்து
போன பின்னும்
பூவில் மணம்
மிச்சமிருப்பதைப் போல்
நினைவில் நிற்கிறாய்.....

நீருக்குள் கல்போல
நெஞ்சுக்குள் மூழ்கிவிட்டாய்.....
       
கல்லுக்குள் நீர்போலக்
கட்டாயம் இருப்பேனா?

படையல்

     தலையில தலையில அடிச்சேனே! பாவி மனுஷன் மர மண்டைல ஏறலையே! இப்படியுமா கண்டிருக்கோம்.... சாகுற வயசா? அப்படி அதுல என்னாதே இருக்கோ? இப்புடிப் போய்ச் சேந்துட்டாரே....!
 
     நண்டுஞ் சுண்டுமாத் திரியுதுகளே! இந்த மூணு பொட்டயையும் எப்படிக் கரை சேக்கப் போறாளோ....? மகராசன் கண்ண மூடிட்டுப் போயிட்டாரே....!
 
     எத்தன குடியக் கெடுத்தாலும் குடிய விட்டொழிக்கத் தெரியலையே....!
 
     குடி மட்டுமா? பான்பராக் வேற....
 
     எந்த நேரமும் ஒதக்கித் தின்னுக்கிட்டே கெடந்தா.... அதான் தின்னுடுச்சு....
 
     வாயி வயிறெல்லாம் புண்ணு; அரிச்சிடுமில்ல.... பூராம் வெந்து போச்சு....
 
     டாக்டர் வைத்தியம் பாக்க மாட்டேன்ல சொல்லிட்டாரு.... இது தான் கடைசி.... இனி ஒருக்கா பான்பராக்கத் தொட்ட.... அடுத்து...  ஏங்கிட்ட வராதன்னுட்டார்ல....

     உசுரோட இருந்தாத்தான வாரத்துக்கு....

     இதுக்குமேல வைத்தியம் இல்ல; ஒங்க பக்குவம்தான் முக்கியம்; எச்சரித்து அனுப்பினார் பெரிய டாக்டர்.

     புத்தி கெட்ட மனுஷனுக்கு எத்தன நேரம்தான் காவ காக்குறது? தானா இழுத்து வச்சு, எல்லாரையும் கஷ்ட்டப் படுத்திட்டுக் கண்ண மூடிட்டாரு.

     எழவுக்கு வந்த எல்லாருக்கும் இதுதான் பேச்சு....

     கத்தல்கள், கதறல்களுக்கிடையே மயானத்துக்குப் போய் வந்தவர்கள் மறுநாள் சாஸ்திரத்துக்கு வாங்க வேண்டிய சாமான்களை எழுதிக் கொண்டிருந்தார்கள்....

     ''படையலுக்கு, பாட்டிலும் பான்பராக்கும் மறக்காம வாங்கிடுங்க,'' என்றொரு  குரல் ஒலித்தது.
 
     அத்தனை உதடுகளும் ஆமோதித்தன.

பரிசீலனை

     இப்பவே இப்படிக்  கொளுத்துதே,மட்ட மத்தியானத்துல என்ன ஆகுமோ என்று தவித்தபடி நடந்து, ஒதுங்க இடமில்லாமல் முச்சந்தியில் காத்துக் கிடந்து, வெகுநேரம் கழித்து, தடதடக்கும் சத்தத்தோடு தள்ளி நின்ற டவுன்  பஸ்ஸில் முண்டியடித்து ஏறி, கூட்ட நெரிசலில் பிதுங்கி, இரைச்சலையும் குமட்டலையும் சகித்து, இருபது கிலோ  மீட்டர் தள்ளி இருக்கும் பாளையத்தில் இறங்கி, மூன்று பர்லாங் நடந்து, தாலுகா ஆபிஸ் வந்தார் தர்மலிங்கம்.

     ஏம்ப்பா..... குடும்ப அட்டை வாங்க யாரைப் பாக்கணும்....?

     பாத்தா பத்தாது பெருசு; கவனிக்கணும் என்று கண்ணடித்தான் ஒருவன்.

     ''இந்த வயசுல உனக்கு எதுக்குயா குடும்ப அட்டை?'' கிண்டலடித்தான் இன்னொருவன்.

     எனக்கில்ல தம்பி..... என் பேரன் குடும்பத்துக்கு;பயலுக்கு வண்டிப் பெரியாறுல வேல; வாரத்துக்கு ஒரு நாள் தான் வீட்டுக்கு வாரான்; அதுவும் நாயத்துக் கிழமையாப் போகுது; அதான்..... நாமளாவது ஏற்ப்பாடு செய்யலாமேன்னு, மனு எழுதிக் கொண்டாந்தேன்..... 
   
     ஏ 3 கிளார்க்கப் பாருங்க..... 

     அவர எங்க போயித் தேடுறது?

     அதோ அந்த மாடியில ஏறி எடதுபக்கமாத் திரும்பினா சன்னல் ஓரமா 3 வது டேபிள்ல, கண்ணாடி போட்டு ஒரு வழுக்க மண்டையன் இருப்பாரு..... அவருதான் ஏ 3 கிளார்க்.

     பெரிய பெரிய  படியில நின்னு நின்னு ஏறி, மேல போனார் பெரியவர்..... 

     மாடி அறையில் யாரும் இல்லை; காத்தாடிகள் மட்டும் சுற்றிக் கொண்டிருந்தன..... பட்டப் பகலில் ட்யூப் லைட்டுகளும் எரிந்தபடி..... ஏதேதோ காகிதங்கள் போட்டது போட்டபடி..... 
    
     மின்வெட்டும், கும்மிருட்டும், கொசுக்கடியும் நினைவுக்கு வந்தவராய் வாசலில் திரும்பி நின்றபடி வேடிக்கை பார்க்கலானார்.....

     யார் யாரோ வந்து போய்க்கொண்டிருந்தார்கள்;கரை வேட்டிகளும், கட்சித் துண்டுகளும் கம்பீரம் காட்டிக் கொண்டிருக்க, அழுக்குச் சட்டையும் பரட்டைத் தலையுமாய் நலத்திட்ட உதவிகளுக்காக ஏங்கித் தவிப்பவர்க்களுமாய்த் தாலுகா ஆபீஸ் தனக்கே உரிய தடபுடலோடு காட்சியளித்தது.

     ஏ.... பெருசு.... அங்க என்ன நிக்குற....? எறங்கி வா....! டீ குடிக்கப் போயிருப்பாங்க.... பெறகு வா..... 

     தயங்கித் தயங்கிப் படி இறங்கினார் பெரியவர்; என்ன எழவுடா? ஆளாளுக்கு அதிகாரம் பண்ணுராய்ங்க..... 

     குல சாமியக் கும்பிட்டபடி திரும்பிப் பார்த்தார்..... மாடியில் இருவர் நிற்பதைக் கண்டு, மீண்டும் படியேறினார்..... முட்டி வலிக்க மேல்படியில் கால் வைத்த போது, அவர்கள் இறங்கத் தொடங்கினார்கள்..... 

     சார் என்று பெரியவர் அழைத்தவுடனே, நாங்களும் உங்களைப் போலத்தான் அப்ளிக்கேசன் கொடுக்க வந்தோம் என்று சொல்லிக் கொண்டே இறங்கிப் போய்விட்டார்கள.

     பெரியவர் படியிலேயே உட்கார்ந்து விட்டார்; எது எப்படிக் கிடந்தாலும் கிடக்காட்டியும், வேலவெட்டி நடந்தாலும் நடக்காட்டியும், பொழுது போறதும், வயிறு பசிக்கிறதும், சரியா நடந்துரும்;  இதுக்குத்தான் சொன்னாங்களோ..... ''கால் காசு உத்தியோகம்னாலும் கவர்மென்ட் உத்தியோகம் பாக்கணுமின்னு;'' 

     மேல ஒருத்தர் ஏறி வந்தார்..... 

     வருவது ஆபிசரா....? இல்ல ..... நம்மளமாதிரி  வெவரங் கெட்ட மனுசனா....? கண்களால் எடை போட்டுக் கொண்டிருந்தார் தர்மலிங்கம். 

     தர்மம் கேட்க்க வந்தவரோ என்று நினைத்தோ என்னவோ, அவரைக் கண்டு கொள்ளாமலேயே  உள்ளே நுழைந்து, தன் இருக்கையில் உட்கர்ந்து எதையோ புரட்டிக் கொண்டிருந்தார் - குமாஸ்தா குமார். 

     மெல்ல எழுந்து.... உள்ளே நுழைந்து.... சார்.... சார்.... என்று தயங்கி அழைத்தவர், சற்று குரலை உயர்த்திக் கூப்பிட்டார். 

     குனிந்த தலை நிமிராமலேயே படித்துக் கொண்டிருந்தார் குமாஸ்தா. 

     காது.... கேக்காதோ.... யோசித்துக் கொண்டிருந்த போது, உள்ளே நுழைந்தார்.... இன்னொரு சாரோ.... மோரோ.... 

     பெரியவரை இவரும் கண்டு கொள்ள வில்லை;  அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்; அவகாசம் தந்து காத்திருந்தார் தர்மலிங்கம். 

     கங்குலி இப்படிக் கவுதுப்புட்டனே! சேவாக் அதுக்கும் மேல..... 

     இவனுகளுக்கு இதே பொழப்பாப் போச்சு..... ஒரு தடவ ஜெயிச்சா, ஒம்பது தடவ தோப்பாணுக..... 

     தோக்குறதுக்குன்னே போவாயிங்களோ....? விளம்பரத்துக்கு போஸ் கொடுக்குறது.... கவர்மெண்டு காசுல ஒலகம் சுத்துறது.... போனாப் போகுதுன்னு பேட்டப் பிடிக்கிறது.... பந்தா காட்டுறது.... அவுட்டான சொரனையே இல்லாம வெளிய வாரது.... கோக் குடிக்குறது..... ஊர் மேயுறது..... இந்த லட்சனத்துல கோச் சரியில்ல.... கோர்ட் சரியில்லன்னு உதார் விடுறது.... எல்லாம் வெளங்கா மூஞ்சிக..... 

     இதுல சரத்பவார் வேற தாம் தூம்ன்னு ஸ்டேட்மென்ட் விடுறது.... இவருக்கு விவசாயம் விளையாட்டாப் போச்சு.... விளையாட்டு வெனயாப் போச்சு..... 

     சுந்தரம் பேசியதையோ, பெருசு கூப்பிட்டதயோ, காதில் வாங்காமலேயே சினிமா கிசுகிசுவை சிலாகித்துக் கொண்டிருந்தான் குமார். 

     ஏம்ப்பா.... குடும்ப அட்டை வாங்க, எழுதிக் கொண்டாந்திருக்கேன், யாரு கிட்டக் கொடுக்கணும்?
     
     பெருசு.... இதுக்கெல்லாம் காலையிலேயே வரவேணாமா? A3 குப்புசாமி R I . மீட்டிங் குக்குப் போயிட்டாரே! நாளைக்கு வருவாரோ மாட்டாரோ.... எதுக்கும் நாளான்னிக்கு வாய்யா....! 

     என்ன செய்வது....? அவுக அவுக வேலைய அவுக அவுகதான் பாக்கணும், என்கிற நினைப்போடும், குமாஸ்தா குமார் படித்துக் கொண்டிருந்தது 'சினிமா எக்ஸ்பிரஸ்', என்று தெரியாமலும், படி இறங்கினார் தர்மலிங்கம்.

******

     படிப்படியாப் போனாலும் பசையோட போனாத்தான் கவர்மெண்டுக் காரங்க கண்ணத் தெறப்பாங்க..... 

     தர்மலிங்கத்துக்கு விபரம் புரிந்தது.... 

     நாலஞ்சு தடவ அலஞ்சாச்சு.... நாய் பட்ட பாடாச்சு.... நாதாரிப் பொழப்பாச்சு... 

     தாலுகா ஆபீஸ்க்கு எதிரே மரத்தடியில் கொட்டகை போட்டு, மை கசியும் பேனாவும், மடி நிறைய ஆசையுமாய், ஆறாவது மகள் அல்போன்ஸ் மேரி கல்யாணத்துக்குக் காசு தேடும் கணக்கோடும், காத்திருந்த அடைக்கல ராஜிடம், அடைக்கலமானார் தர்மலிங்கம். 

     கசங்கி, வியர்வை மணக்க, பெருசு கொடுத்த காகிதத்தைப் படித்து விட்டு, புதிதாய் விண்ணப்பம் தயார் செய்து, ஒரு ரூபாய் கோர்ட் பீஸ் ஸ்டாம்புகள் ஐந்தை அடுத்தடுத்து ஒட்டிய களைப்போடு நிமிர்ந்தார் அடைக்கலம். 

     கையெழுத்துப் போட வேண்டிய பேரன் முருகானந்தன், வண்டிப்பெரியார் போயிட்ட விசயத்தைக் கவலையோடு சொன்னார் பெருசு. 

     அட.... இதுக்குப் போயி அலட்டிக்கலாமா....? அச்சு அசலாய், முத்து முத்தாய், முருகானந்தம் கைநாட்டை (கையெழுத்தைத் தான்) போட்டு, அசத்திய அடைக்கலத்துக்கு அப்போதைய வரவு முப்பது ரூபாய்.

     கவலையே படாதீங்க.... நானே சேத்துர்றேன்; வீட்டுல சொல்லி வைங்க; விசாரிக்க வருவாக; எல்லாம் நல்லபடியா நடக்கும்; நம்பிக்கை ஊட்டினார் அடைக்கலம்.

     நிம்மதியாய் நடந்தார் பெருசு.

****** 

     நடந்தது நடந்துருச்சு.... நிம்மதியா  இருங்க.... இன்னைக்கு நிச்சயமாத் தீர்ப்பு ஆயிறும்.... நம்மளக் கொஞ்சம் கவனிச்சிடுங்க - இது வக்கீல் குமாஸ்தாவின் வாயுறை.

     நாதியத்த பெருசு.... நீதிமன்ற வராண்டாவில் நின்றிருந்தார்....

     தொப்பை வயிறு தொங்க,கைதிகளிடம் தொங்கிக் கொண்டிருந்தார் ஏட்டையா.

     தாம்பு மாடு மாதிரி வெலங்கு போட்ட வெடலைங்க நிக்கிற ஸ்டைல பாத்தா, இந்த ஜென்மத்துல திருந்துவானுகன்னு தோனல.

     கவலையோடு காத்திருந்ததெல்லாம் கடன் கொடுத்த பார்ட்டிகள்தான்.

    எட்டாவது வாய்தாவில் சர்க்கார் தரப்பு ஆஜராகாததால் நீதிமான் ரவீந்திரன், ஆரவாரமான கோர்டில் அமைதியாய்த் தன தீர்ப்பை வாசித்தார்....

     ''பெரியவர் தர்மலிங்கத்தின் பேரன் முருகானந்தத்தின் விண்ணப்பத்தை உத்தமபாளையம் வட்டாட்சியர் மறுபரிசீலனை செய்ய இந்த கோர்ட் உத்தரவிடுகிறது''.

     தர்மலிங்கத்துக்குத் தலை சுற்றியது.... மறுபடியும் மொதல்ல இருந்தா....?

     முருகானந்தத்திற்கு நம்பிக்கை பிறந்தது - 'தன் பேரனுக்கு ரேசன் கார்டு கிடைத்து விடும்', என்று.

     அடைக்கலம் ஆனந்தப் பட்டார்.

விவஸ்த்தை

     என்ன  செய்கிறோம் என்ற விவஸ்த்தை இல்லாமலேயே என்னென்னவோ செய்கிறோம்..... 

     சாமி கும்பிடு..... சடங்கு சாஸ்திரம்..... அரசியல்..... தேர்தல்..... அக்கம் பக்கத்துப் பொறணி..... 

     செத்த வீடென்ற சிந்தனையே இல்லாமல் செல்போனில் கதைப்பது.....  கேலி பேசிச் சிரிப்பது.....

     இப்படித்தான், முல்லைபெரியாறு பிரச்சனையிலும் முண்டாதட்டி, மூர்க்கமாய் ஆர்ப்பாட்டம் செய்து, கூட்டத்தோடு கூட்டமாய்க் கோசம் போட்டு, மீடியாக்களிடம் வேஷம் போட்டு..... தடியடியில் சிக்காமல் தப்பித்து வந்தான்;

     காலையில் கொக்கரித்த கோழி இப்போது சிக்கன் 65 ஆக மணத்தது.....

     சாப்பிட்டுக் கொண்டே பக்கத்திலிருந்த புத்தகத்தைப் புரட்டினான்.....

     செம்பை முருகானந்தம் எழுதிய 'தவிப்பு' சிறுகதையைப் படிக்கப் படிக்க.....

   ''பதுங்கு குழிக்குள் பயந்து பயந்து,அண்ணன் தன் கண்களை மூடிக் கொண்டு, தங்கையின் வாயைப் பொத்தப் பொத்த,அடக்க முடியாத அலறலோடு பிள்ளைப் போராளி பிறந்த போது..... வெடித்துச் சிதறி வந்து விழுந்த ஒரு வளையல் கையில் ஒற்றை விரல் மட்டும் துடித்துக் கொண்டிருக்க....'' 

     துளாவிக் கொண்டிருந்த இவன் கைகளில்..... காலித் தட்டு.....

     மனைவியை முறைத்தான்.....

     சூடாக விழுந்தன 'சிக்கன் 65'


க(த)ண்ணீர்

     தேங்கிய  நதிகள் 
              அணைகளில் நின்று
                        தூங்கிய காலம் போயிற்று;

     ஏங்கிய நதிகள்
               எங்கோ இருந்து
                         ஓங்கிய விசும்பல் ஆயிற்று;

     வாங்கிய நீரை
               வானும் மண்ணும்
                          வழித்துக் குடித்து ஆர்க்கிறது;

     ஓங்கிய மரங்களை
                ஒடித்து எரித்த
                          ஓலைக் குடிசையும் வேர்க்கிறது;

      சினிமாக் கொட்டகை
                போனால் என்ன?
                            சீடி வகைகள் ஏராளம்;

       இனிமாக் குடித்த
                எளியவர் போல
                              சாக்கடை நதிகள் தாராளம்;

        போதாக் குறைக்கு
                 வீதிக் கிரண்டு
                           டாஸ்மாக் கடைகள் திறந்தாச்சு;

         தோதா நமக்குத்
                  தொலைவாய்ப் போச்சு
                             தேசியம் என்பதை மறந்தாச்சு;

         குடிக்கத் தண்ணீர்
                    கேட்டுக் குழந்தை
                               கண்ணீர் விட்டுக் கதறும்;

         குவளைத் தண்ணீர்
                     எடுக்கப் போன
                                அம்மா மனசு பதறும்; 

          தண்ணீர் விற்கிற
                    கடைகள் எல்லாம்
                               அடைத்துக் கிடக்குது ஐயா!

          கண்ணீர் விடுறேன்
                    கையில் பிடித்து
                               நக்கிக் குடிடா பையா!

கடலை


     பீச், பார்க்,பஸ் ஸ்டாண்ட் என்று பொது இடங்களில் பக்கத்தில் இருப்பவர்களைப் பற்றிய கவலையே இல்லாமல், ஒரு ஆணும் ஒரு பெண்ணும், பேசிக்கொண்டிருந்தால் அதற்குக் "கடலை போடுதல்" என்று கண்டுபிடித்துச் சொன்னவன் யாரோ? அதைப் பற்றி 4 பக்கத்துக்கு எழுதச் சொல்லியிருந்தார் அவன் வேலை பார்க்கும் பத்திரிக்கை ஆசிரியர்.


     பேனாவைப் பிடித்தபடி,பேப்பரை முறைத்தபடி,எதை எதையோ யோசித்தபடி இருந்தான்.... எழுத முடியவில்லை நினைத்தபடி....


     ''அழைக்காதே....அழைக்காதே.... அவைதனிலே.... என்னை....யே.... ராஜா....'' பாடல் ஒலித்தது; அவனது செல் போன் ரிங் டோன் அது.

      அவசரமாய் எடுத்தான்....

      எதிர் முனையில்....

     அடே மச்சி.... தெளிவாய் ஏதும் கேட்கவில்லை; சிக்னல் ப்ராப்ளம்; தொடர்பைத் துண்டித்தான்;

     தன் பள்ளிக்கூட நண்பனுடன், கிராமத்து வீட்டில் துள்ளித் திரிந்த நினைவுகள் அலைமோதின....

     கடலைக் காட்டில் தப்புக் கடலை பெறக்கி, சுட்டுத் தின்ற சுகமான நாள்கள்....

     எழுத்தே ஓடவில்லை.... எண்ணமெல்லாம் கடலைக்குள் இருக்க, எழுத்தில் மட்டும், எப்படிக் கடலை போடுவது....?

     அவன் மனைவியும் என்னங்க.... என்னங்க.... என்று இழுத்தாள்....

     ஏன்டி.... இப்படி எழுத விடாம அனத்துற....? என்று சிடுசிடுத்தபடியே திரும்பினான்.... 

     பக்கத்தில் வைத்தாள்-''பாலித்தின் பையில் பச்சைக் கடலை.''

     பேனாவை மூடிவிட்டு....

     பரபரப்பாய்க் கடலை போட்டான்.

வரம்.


     அவன் ஒன்றும்  பெரிய எழுத்தாளன் இல்லை; ஆனால் எழுதிக்கொண்டேதான் இருப்பான்....

     அவன் கவிஞனும் இல்லை;ஆனால் தன் பெயருக்கு முன்னால் கவிஞன் என்று போடாததற்காகத் தன் கல்யாணத்தையே நிறுத்தியவன்.....

     பேனாவில் எழுதப் பிடிக்காது; பென்சில்....பென்சில்தான் தன் சிந்தனை ஓட்டத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் என்று நம்பி, பென்சிலும் பேப்பருமாய் அலைபவன்.....

     100  வார்த்தைகளை வைத்துக் கொண்டு 400 பக்கங்கள் எழுதிவிடும் சாமர்த்தியத்தைத் தெரிந்தவர்களிடமெல்லாம் படித்துக் காட்டிப் பரவசப் படுவான்.....

     ஓடி ஒழிந்தவர்களும், பின்னால் பேசியவர்களும் பாக்கியசாலிகள்.

     பாவப்பட்ட ஒரே ஜென்மம்..... தன் இஷ்ட தெய்வத்திடம் மன்றாடிக் கேட்டது விவாஹரத்தல்ல.....

     செவிடாய்ப் போகும் வரம்.