வீடு

அப்பா –
வேலைக்குப் போகிறவனாய்
இருப்பான்;
அம்மா –
தொலைக்காட்சி பார்ப்பவளாய்
இருப்பாள்;
பிள்ளைகள் –
பள்ளி விடுதியில்
இருப்பார்கள்:
வேலைக்காரி –
வந்து போகிறவளாய்
இருப்பாள்:
வீடு –
போட்டது போட்டபடி
இருக்கும்.

நவீனம் 2

மூக்கைச் சுற்றி
மூளையைக் கசக்கி
முடிந்த போது
முடியாமல்
முடிந்தது
தொடக்கம்……
             சூனியத்தின்
             நீட்ச்சியாகவும்,
             இருத்தலில்
             சாட்சியாகவும்,
             முறைத்துக் கொண்டிருந்தது
              அடுத்த புத்தகத்தின்
              முதல் பக்கத்தில்.
முதலில் – முன் நவீனத்துவம்
முடிவில் – பின் நவீனத்துவம்
               அது
              முடிவான
              முதல்.
அப்படியானால்
அது (எது?)
எப்படியானால்
என்ன?

நவீனம்

அது
இது
சாம்பல்
சருகு
மின்மினி
மேகத்திரை
பதுங்கு குழி
பாடை
வெள்ளை இருட்டு
வெளிச்ச இரவு
இன்னும் சில வார்த்தைகள்……
கோழி கிளறுவது போல்
களைத்துப் போட்டு
எழுதிப்பார்……
                நவீன க(வி)தை பிறக்கும்.
                ‘வி’யை எடு
                ‘ழு’வை இடு
பின் நவீனத்துவமா?
முன் நவீனத்துவமா?
                அறிவு ஜீவிகள்
                அர்த்தம் கண்டு
                அறிவிப்பார்கள்;
                சாகித்தியங்கள்
                சாத்தியப்படும்;
‘அது’வை
அதிகப்படுத்து;
அது
அழகாய் இருக்கும்.

பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு

கொலை
கொள்ளை
லஞ்சம்
உழல்
மார்க்கமாகச் செல்லும்
அரசியல்வாதி எக்ஸ்பிரஸ்……
இப்போது –
தேர்தல் ஜங்சனில்
வாக்குச் சீட்டுப் பிளாட்பாரத்திலிருந்து
புறப்படும்;
இது –
நீதி
நேர்மை
நியாயம்
தொண்டு
தூய்மை
ஆகிய நிலையங்களில்
நிற்காது.

குறைப்பு

ஓட்டுக்கு இருநூறாய்
வீட்டுக்குள் எறிந்த
நானூறில்
நாய்குட்டி வாங்கி
நன்றாய் வளர்த்தான் பிள்ளை.
இடைத்தேர்தல் வந்தது
கொடை வள்ளல்கள் வந்தார்கள்
குறைத்துக் கெடுத்தது
கூறுகெட்ட நாய்……
தனக்கொரு
இணைகிடைப்பதை.

வாக்குறுதி

அடுத்த தேர்தலில்
ஐந்தாண்டுக்குள்
குறைந்த பட்சம்
தொகுதிக்கு இரண்டு
இடைத்தேர்தல்களுக்கு
உத்தரவாதம் தரும்
கட்சிக்கு மட்டுமே
எங்கள் ஓட்டு.

அந்தஸ்து

அண்ணே……!
நாங்கெல்லாம்
உங்க அளவு இல்ல……
ஏதோ
எங்களுக்குத் தெரிஞ்சத
எழுதுகிறோம்.
             வார ஞாயித்துக் கிழம
             காலைல 11 மணிக்கு
             கலைஞர் டிவில
             கவியரங்கம்;
             நான் தான் தலைமை;
             கட்டாயம் பாருங்க.
யாருடா அது……?
             அவங்கெடக்குறான்
             வெட்டிப்பய……
             பெரிய இவன்னு நெனப்பு
              எல்லாத்தையிம்
              குத்தஞ்சொல்லிக்கிட்டு
யாருடா அது……?
               ஸ்கூல்ல படிக்கிறப்ப
               லீவ்போஸ்ட் வாத்தியார்டா.

அரிப்பு

அடமக்கு
எத்தன தடவ சொன்னாலும்
மரமண்டையில ஏறாதா?
நீயெல்லாம் படிச்சு……
என்னத்தக் கிழிக்கப் போற……
பேசாம –
மாடுமேய்க்கப் போடா;
மேய்ச்சுட்டாலும்
கழுத உருப்பட்ட மாதிரிதான்.
            ஆறாம் வகுப்பில்
            யை
            வாய் எழுதி
            ஐயாவிடம் வாங்கிய
            அர்ச்சனையின் அலைவரிசை……
அப்படி இப்படி அடித்து
எப்படியோ படித்து
அவரை இவரைப் பிடித்து
அய்யா ஆயிட்டேன்
கல்லூரில்.
             என் ஆறாவது புத்தகத்தின்
             பின் அட்டையில்
             அச்சாகியிருந்தது –
வெளிட்ட புத்தகங்கள்
ந்து.

உறுதி

ஊன்றி நடக்க
உறுதி கொண்டால்
ஒட்டடை நூல்கூட
ஊன்றுகோல் தான்.

பாவங்கள்

60 பேரை
ஏற்றிக் கொண்டு
ஆட்டோ ஒன்று விரைகிறது;

20 பேரைத்
திணித்துக் கொண்டு
ரிக்ஸா ஒன்று நெளிகிறது;

முன்னே இருவர்
பின்னே மூவர்
ஒற்றைச் சக்கர வாகனத்தில் தான்
இந்த விசித்திரம் நடக்கிறது;

எல்லாம்.....
எல்லாம்.....

பள்ளிக்குப் போகிற
பாவங்கள்.


துளிப்பாக்கள்

விகாரமாய் இருக்கிறது 
புத்த விகாரம்
சிங்கள நரிகள் சிரிக்கின்றன

******

இந்தியா இரை போட்டது...
ராஜபட்சி எச்சமிட்டது
அசோகச் சக்கரத்தில்.

******

புள்ளிமான் வயிற்றில்
புலியாய்ப் பிறந்தது
பிரபாகரன் மட்டும்தான்

******

பரலோகத்தைக் காப்பாற்ற
பாலசிங்கம் அழைத்தாரா?
திரும்பிவா  தீர்க்கதரிசியே

******

எப்போது முடியும்?
புலிகளுக்கு மணிக்கட்டிய
எலிகளின் காலம்

******

கண்ணீர் வடிக்காதே
கவிதை படிக்காதே
களத்தில் இறங்கிப் போராடு

சாபம்

ஒன்றுக்கு மூன்றாய்க்

கோடரி கொடுத்த

குற்றத்திற்காக......

மரங்கள் சாபமிட்டன -

கடவுள் கல்லாய்ப் போனான்

தமிழ்த் தாய் வாழ்த்து

தமிழன்னை தானெந்தன் பேச்சு - அவள்

      தந்ததுவே கவிதையெனும் மூச்சு;

அமிழ்தவளைக் கும்பிட்டுக் கேட்டு - அவள்

       அருளாலே  பாடுகிறேன் பாட்டு!