என்னைப் பற்றி

                                                      சுட்டும்  விழிச்சுடர்..... 


          நல்லிதயம்  பெற்றோரே...!
          நற்றமிழில் வல்லோரே...!
          சின்னக் கவியெந்தன்
          சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.

என்னைப் பற்றிச்
சிலவரிகள்
எடுத்துச் சொல்ல
விரும்புகிறேன்...

நேரச் செலவைப்
பாராமல்
நேயத்தோடு
நீரிதனை

ஏற்றுக்கொள்ள
வேண்டுகிறேன்
ஏக்கத்தோடு
பாடுகிறேன்....

          பிறவியில் என்பெயர்
          மணிவண்ணன்;
          பெற்றவர் பெயரோ
          ராதாகிருஷ்ணன்.                       
                       
                              இரண்டாம் பிறவியில்
                              என்கவி அறிந்து
                              குன்றக்குடியின்
                              அடிகள் தானும்

                               வாழ்த்திச் சூட்டிய
                               வளர்தமிழ்ப் பெயரே
                               கவிதாமணி யெனும்
                               இரண்டாம் முகவரி.

முதல்வகுப்பு முடியுமுன்னே
முதல்மேடை ஏறியதில்
முதல்பரிசு பெற்றதுவே
முகவரியின் முதல்வரியாம்.

எட்டாம் வகுப்பினிலே
நேருமகான் நேர்த்தியினை
எடுத்தியம்பும் போட்டியதில்
மாநிலத்து முதற்பரிசு.

புகுமுக வகுப்பினிலே
தேவாரக் கட்டுரையில்
மைய அமைச்சரவர்
மகிழ்ந்தளித்த முதற்பரிசு.

பாரதி நூற்றாண்டின்
பாட்டரங்கம் தனிலேறிப்
பாங்காயப் பெற்றதுவும்
பகட்டான முதற்பரிசே!

             தேசிய மாணவர்
             படைதன்னில்
             சேர்ந்து பெற்ற
             பயிற்ச்சிகள் எத்தனை?

             தேசிய அளவில்
             போட்டிகளில்
             தேடிக்கொண்ட
             பரிசுகள் எத்தனை?

சென்னை-
அம்பத்தூர்
இலக்கியப் பேரவையில்
அகவற் போட்டிதனில்
ஆயிரம் பேருள்ளே
இரண்டாம் பரிசெனினும்
இருமாப்பு இருமடங்கு.

கல்லூரி களிலெல்லாம்
கணக்கற்ற போட்டிகளில்
வென்றெடுத்த பரிசுகள்தான்
எத்தனை எத்தனையோ...!

அண்ணா பல்கலையின்
அத்தனை போட்டியிலும்
அள்ளிவந்த பரிசுகளில்
ஆனந்தம் வழிகிறது.

கோவை மாநகரில்
தனியொருவன் நானாகத்
தட்டிவந்த சுழற்கோப்பை
தனிப்பெருமை கொண்டதுதான்.

மதுரை-
வேளாண் பல்கலையின்
வித்தெல்லாம் எனக்கங்கே
தனிமன்றம் அமைக்கின்ற
விசித்திரமும் நடந்ததுவே.

மதுரைப் பல்கலையின்
மகுடத்து உச்சியிலே
படுத்துறங்கும் பெருவாய்ப்பு
பலகாலம் வாய்த்ததுவே.

        சென்னை-
        கம்பன் கழகத்தின்
        கவிதைப் போட்டியிலே
        முதற்பரிசு பெற்றுபுகழ்
        முடிசூட்டிக் கொண்டவன்நான்.

                  "தேவதை வருகிறாள்"
                  கைஎழுத்திதழ் ஆசிரியராய்
                  அரும்பணி ஆற்றிய
                  அனுபவமும் இருக்கிறது. 

கல்லூரிக் காலமெல்லாம்
கவிபாடித் திரிந்ததனால்
கட்டாயப் பாடத்தில்
கரையேற வில்லைநான்.

                    சிந்தையெல்லாம் செந்தமிழின்
                    சிந்தனையே இருந்தாலும்
                    எந்தையவர் என்னைத்தான்
                    தினித்ததுறை வணிகவியல்.

வணிகவியற் பாடத்தில்
முதுகலையிற் பட்டத்தை
முதல்வகுப்பிற் பெற்றாலும்
முதலீடு ஆகவில்லை.

                    கல்வித்துறையில் ஒருபாட்டம்
                    கணக்காய்நானும் பெற்றாலும்
                    கற்றுக்கொடுக்கும் ஒருவாய்ப்பு,
                    கனவைப்போல வாய்த்ததுவே.

பலியாடாய்ப் போனாலும்
பலகாலம் ஆனாலும்
விழிபிதுங்கி நிற்கின்ற
விபரீதம் எனக்கில்லை.
               
மொழித்தாயின் அரவணைப்பில்
முகச்சாயம் இல்லாத
தனித்தன்மை இருப்பதனால்
தலைநிமிர்ந்து நிற்கின்றேன்.

                      சொல்லூரும் நாவுக்குச்
                      சுகமூறும் பாவுக்குத்
                      தடைகூறும் யாருக்கும்
                      தலைசாய்க்க மாட்டேன்நான் .

ஏரோட்டும் என்பேனா
என்றேனும் ஒருநாளில்
தேரோட்டும் என்கின்ற
தெம்பெனக்கு இருப்பதனால்...

யார்மாட்டும் யாசித்து
ஒருவாயப்புப் பெறுவதிலே
ஒருநாளும் என்நெஞ்சு
உடன்பாடு கொண்டதில்லை.

          பாட்டரங்கம் பலஏறிப்
          பாராட்டுப்  பெற்றாலும்
          சீராட்டும் வாய்ப்பெனக்குச்
          சீர்கொண்டு வரவில்லை.

          இத்தனை மேடை
          ஏறிய பின்னும்
          இத்தரை தன்னில்
          எனக்கிட மில்லை.

          குடத்திடை இட்ட
          நெருப்பென நெஞ்சு
          தகிக்கிற  தாகம்
          தீர்ந்திட வில்லை.

எனக்குத் தெரிந்ததில்
எள்ளளவேனும்
தனக்குத் தெரியும்
என்பவர் கூட
உயரப் பறக்கும்
குருவிகள் போல
ஊர்வலம் வருவது
எப்படியோ...!

உதிர்ந்த இறகினைப்
போல நானும்
உட்க்கார்ந் திருப்பது
சரிதானா...?

           அடையாளம் தெரியாத
           உடையாரும் இல்லார்முன்
           அவமானப் படுவதுதான்
           வெகுமானம் ஆகிறது.

           அவதூறு சொன்னாலும்
           அழகில்லை என்றாலும்
           சிப்பிக்குள் முத்திருந்து
           சிரிப்பதற்குத் தடையுண்டோ...?

                            மேலேறி வருவதற்கு
                            மேனியுரம் இருந்தாலும்
                            மேலேரும் வரையேணி
                            வேண்டிய தாகிறது.

காலம் கடந்திதனை
அறிந்துகொண்ட காரணத்தால்
கடவுளைக் கொஞ்சம்
கண்திறக்க வேண்டுகிறேன்.

காலூன்ற விழைகின்ற
கவியெந்தன் பாட்டுக்குச்
செந்தமிழின் வல்லோரே
செவியூன்ற வேண்டுகிறேன்.

            மூன்றாம் பிறவிக்கு
            முறையீடு செய்கின்றேன்...
            முடிந்தால் வாய்ப்பளித்து
            வாழ்த்துங்கள் வாழ்த்துங்களேன்...

அறிமுகம் செய்வதிலும்
ஆணவமே கலந்திருப்பின்
அறியாமை என்றதனை
அழித்துவிட வேண்டுகிறேன்.

குறைகுடம் என்பதனால்
கூத்தாடி இருக்கின்றேன்...
நிறைகுட மாகவென்னை
நேர்படுத்த வேண்டுகிறேன்.

            எழுத்தின் வேகம்
            மிகுந்த தனால்
            ஏதேதோ நான்
            எழுதிவிட்டேன்.

                              எந்தப் பிழைதான்
                              இருந்தாலும்
                              சொந்தப் பிள்ளை
                              போல் நீரும்
                              பொறுத்துக் கொள்ள
                              வேண்டுகிறேன்;
                              வாழ்த்தி அருளத்
                              தூண்டுகிறேன்.

                                                                                           நன்றி..!
                                                                                           வணக்கம்..!
                                                                                           அன்புடன்-
                                                                                           கவிதாமணி.

பின்குறிப்பு:

இப்படிப் பெருமை
பேசிட எனக்கு
எப்படி மனமும்
ஒப்பியதோ..!

செப்படி வித்தை
செல்லா தெனக்குத்
தப்படி யேனும்
தப்பிடுமோ..!

அப்படி யேதும்
தருவ தென்றால்
அடியேன் தனியே
வருகின்றேன்...!

முப்படி யேறி
மூப்படி எய்திட
முதுகைத் திருப்பித்
தருகின்றேன்.  

0 comments:

Post a Comment