நடக்கக் கூடாதது.

          தலையில் அடிபட்டு பலத்த காயத்துடன் ஐ.சி. யூனிட்டில் கோமாவில் கிடந்தான் கோபால்.
    
          ஒரு தனியார் பேருந்து தாறுமாறாய் ஓடி ரோட்டோரத்துப் புளியமரத்தில் மோதி பலத்த சேதம். எதிரே வந்த கார் அப்பளமாய் நொருங்கிக்கிடந்தது. யாரும் பிழைத்திருந்தால் தம்புரான் புண்ணியம்.

          விபரம் ஏதும் தெரியவில்லை. ஒரு ஒருத்தர் ஒவ்வொரு விதமாய் விளக்கிக்கொண்டிருந்தார்கள்.
                                                                                                                                 
          ஓட்டுனரும் வண்டியும் கோமாவில்.


          நடந்து போனவனுக்கு என்ன நடந்தது கோமாவில் கிடக்க?

          எங்கேயோ காலராவும் நிமோனியாவும் டைப்பாயடும் வந்து அல்லோலப்பட்டால் இவனுக்கும் வந்துவிடும்.

          சிக்கென் குன்னியா, பன்றிக் காய்ச்சல் இரண்டும் சேர்ந்தே வந்தன இவனுக்கு.
    
          மருந்து, மாத்திரை, மந்திரிப்பு, தாயித்து, பிணிக்கயிறுன்னு பாக்காத பண்டுதமில்ல.
    
          இந்த வயசுலயும் போலியோ சொட்டு மருந்தக்கூட விட்டு வைக்கல.
    
          கோமாவில் இருந்தாலும் இன்னும் என்னென்ன வரும்முன்னு யோசிச்சுக்கிட்டுத்தான் இருப்பாரு நம்ம கோபாலு.
   
          கோமாவுல கிடக்குறவன் யோசிப்பானா?இப்படிக் கதை எழுதுறவன் லூசுப்பயலா? என்று யோசிக்கிறிங்களா?
    
          ஒரு தடவ பிரசவ வலியில துடிச்ச நம்ம கோபாலு எத்தன தடவ செத்தான்னு அவனுக்கே தெரியாது.
            
          அட.... நான் லூசு இல்லைங்க; நெசமாத்தான் சொல்றேன்.... நம்ம பிரண்டு கோபால் இருக்கானே அவன் எதப் பாத்தாலும் கேட்டாலும் தனக்கும் அப்படி நேர்ந்திருமொன்னு நெனைக்கிற டைப்பு.

          இப்படிப்பட்ட கோபால் வாத்தியாரோ, இந்தக் கதையை எழுதுற நானோ இதப்படிக்கிற நீங்களோ நெனச்சுப்பாக்காத ஒன்னு நடந்தது....

          கோபாலுக்குக் கொடுத்தாங்க நல்லாசிரியர் விருது.

0 comments:

Post a Comment