படையல்

     தலையில தலையில அடிச்சேனே! பாவி மனுஷன் மர மண்டைல ஏறலையே! இப்படியுமா கண்டிருக்கோம்.... சாகுற வயசா? அப்படி அதுல என்னாதே இருக்கோ? இப்புடிப் போய்ச் சேந்துட்டாரே....!
 
     நண்டுஞ் சுண்டுமாத் திரியுதுகளே! இந்த மூணு பொட்டயையும் எப்படிக் கரை சேக்கப் போறாளோ....? மகராசன் கண்ண மூடிட்டுப் போயிட்டாரே....!
 
     எத்தன குடியக் கெடுத்தாலும் குடிய விட்டொழிக்கத் தெரியலையே....!
 
     குடி மட்டுமா? பான்பராக் வேற....
 
     எந்த நேரமும் ஒதக்கித் தின்னுக்கிட்டே கெடந்தா.... அதான் தின்னுடுச்சு....
 
     வாயி வயிறெல்லாம் புண்ணு; அரிச்சிடுமில்ல.... பூராம் வெந்து போச்சு....
 
     டாக்டர் வைத்தியம் பாக்க மாட்டேன்ல சொல்லிட்டாரு.... இது தான் கடைசி.... இனி ஒருக்கா பான்பராக்கத் தொட்ட.... அடுத்து...  ஏங்கிட்ட வராதன்னுட்டார்ல....

     உசுரோட இருந்தாத்தான வாரத்துக்கு....

     இதுக்குமேல வைத்தியம் இல்ல; ஒங்க பக்குவம்தான் முக்கியம்; எச்சரித்து அனுப்பினார் பெரிய டாக்டர்.

     புத்தி கெட்ட மனுஷனுக்கு எத்தன நேரம்தான் காவ காக்குறது? தானா இழுத்து வச்சு, எல்லாரையும் கஷ்ட்டப் படுத்திட்டுக் கண்ண மூடிட்டாரு.

     எழவுக்கு வந்த எல்லாருக்கும் இதுதான் பேச்சு....

     கத்தல்கள், கதறல்களுக்கிடையே மயானத்துக்குப் போய் வந்தவர்கள் மறுநாள் சாஸ்திரத்துக்கு வாங்க வேண்டிய சாமான்களை எழுதிக் கொண்டிருந்தார்கள்....

     ''படையலுக்கு, பாட்டிலும் பான்பராக்கும் மறக்காம வாங்கிடுங்க,'' என்றொரு  குரல் ஒலித்தது.
 
     அத்தனை உதடுகளும் ஆமோதித்தன.

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா ஹா ! ஆனால் உண்மை ! நன்றி சார் !

Post a Comment