அசல் கவலை.

   கவலையோடுதான்  போயிருந்தான்; பலர் கவலைப் படுவது போல் காட்டிக் கொண்டனர்; இன்னும் சிலரோ கச்சிதமாய் அழுது, கண்ணீர் விட்டு, புடவைத் தலைப்பில் மூக்கைச் சிந்தி, அடுத்தவர்களை நோட்டம் விட்டு, நகை நட்டை எடை போட்டு, எதை எதையோ அசை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

   செத்துப் போனவனின் பிள்ளையிடம் கூடுதல் கவலைப் பட்டவனாய்.... துக்கம்  விசாரித்தான்....

    அடிவயிற்றைப் பிடித்து அப்பா அலறியதில்  தொடங்கி, ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி, அவசர சிகிச்சை, அனாப் பைசா செலவு உட்பட இத்யாதி இத்யாதிகள் ஒன்று விடாமல் ஒப்பித்துக் கொண்டிருந்தான் பிள்ளை-ஓட்டை ரெக்கார்டு மாதிரி எல்லோரிடமும்.

   கேட்டானான்னு கேட்டா சொன்னானான்னு சொல்லும்படியா இருந்தது சூழல்.

   எடுப்பதற்கு ஏற்பாடானது ... இவன் இன்னும் கூடுதலாய்க் கவலைப் பட்டான்.

   என்ன கவலைப் பட்டு என்ன செய்ய...? போன உசுரு வரவா போகுதுன்னு வியாக்கியானம் பேசாதீங்க....

    செத்தவன், வீட்டுக்குச் சொன்னானோ சொல்லலையோ.... தெரியுமோ தெரியாதோ.... தருவாங்களோ.... மாட்டாங்களோ....                                                       

    வட்டி போனாலும் பரவாயில்லை...
 
    அசலை நினைத்து, அசலாய்க் கவலைப் பட்டான்.

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

"அசலை நினைத்து, அசலாய்க் கவலைப் பட்டான். "
அருமையான வரிகள் நண்பரே!
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

Post a Comment