க(த)ண்ணீர்

     தேங்கிய  நதிகள் 
              அணைகளில் நின்று
                        தூங்கிய காலம் போயிற்று;

     ஏங்கிய நதிகள்
               எங்கோ இருந்து
                         ஓங்கிய விசும்பல் ஆயிற்று;

     வாங்கிய நீரை
               வானும் மண்ணும்
                          வழித்துக் குடித்து ஆர்க்கிறது;

     ஓங்கிய மரங்களை
                ஒடித்து எரித்த
                          ஓலைக் குடிசையும் வேர்க்கிறது;

      சினிமாக் கொட்டகை
                போனால் என்ன?
                            சீடி வகைகள் ஏராளம்;

       இனிமாக் குடித்த
                எளியவர் போல
                              சாக்கடை நதிகள் தாராளம்;

        போதாக் குறைக்கு
                 வீதிக் கிரண்டு
                           டாஸ்மாக் கடைகள் திறந்தாச்சு;

         தோதா நமக்குத்
                  தொலைவாய்ப் போச்சு
                             தேசியம் என்பதை மறந்தாச்சு;

         குடிக்கத் தண்ணீர்
                    கேட்டுக் குழந்தை
                               கண்ணீர் விட்டுக் கதறும்;

         குவளைத் தண்ணீர்
                     எடுக்கப் போன
                                அம்மா மனசு பதறும்; 

          தண்ணீர் விற்கிற
                    கடைகள் எல்லாம்
                               அடைத்துக் கிடக்குது ஐயா!

          கண்ணீர் விடுறேன்
                    கையில் பிடித்து
                               நக்கிக் குடிடா பையா!

0 comments:

Post a Comment