உயிரின் பயன்......!

கணக்கும் பிணக்கும் எதனால் என்ற
        காரணம் நமக்குத் தெரியாமல்
                கயமைத்தனங்கள் ஒழிவதில்லை!

பணத்தின் மேலே பணத்தைப் போட்டுப்
        பாது காத்தும் பயனில்லை:
                பாடையில் பேதம் ஏதுமில்லை!

பிணத்தின் மேலே பிணத்தைப் போட்டுப்
        புதைத்ததுப் பார்த்தும் முடியவிலலை:
                பூமியில் சவக்குழி மீதமில்லை!

குணத்தில் உயர்ந்த குவலய மாந்தர்
        குழியில் இருந்தும் உயிர்த் தெழுவார்:
                கோபுரம் போலே நிமிர்ந்திடுவார்!

தனக்குத் தனக்கெனும தன்னுணர்வு
        தகர்ந்தால் தேசம் நன்மை பெறும்:
                எனக்கும் உனக்கும் பகை மூட்டம்
                        எல்லாம் இந்தச் சுயநலமே!

மனமே எதற்கும ஆதாரம்
        மாண்புகள் தங்கும கூடாரம்:
                மனமே கனவுகள் நனவாக –
                        மானிடப் பண்பினை வளர்த்துவிடு!

கனக்கும் இதயச் சுமைகளுமே
        கண்ணீர் விட்டால் கரைந்திடுமா?
                உனக்கென உருகும் இதயங்கள்
                        உறுதுணையானால் இடர் வருமா?

அன்பால் உலகை வசப்படுத்து;
        அதனால் உன்னை வளப்படுத்து;
                உன்னால் உலகம் வளமானால்
                        உயிரின் பயனே அதுதானே!

0 comments:

Post a Comment