உறவின் அவலம்

1.  அட போடா போடா கிறுக்கா - நீ
             எங்க வந்த முறுக்கா
     அட மூடா மூடா உனக்கு - இந்த
             புத்தி இருப்பது எதுக்கு?

2.  அன்பு என்று சொல்லக் கொண்டு
             அலையுது உன் மனசு - அட
     அன்பு என்று சொல்வ தெல்லாம்
             அந்தக் காலப் பழசு.

3.  முன்ன ஒன்னு பின்ன ஒன்னு
             சொல்வது தான் புதுசு - அட
     முதுகில தான் மொய்க்கும் இந்த
             ஈக்கள் பல தினுசு.

4.  அண்ணன் எனத் தங்கை என
             வாழ்ந்த கதை எல்லாம் - அட
     அடுப்பங் கரை சாம்பல் என
             ஆறிப் போன பின்னே,

5.  தொடச் செடுத்து அள்ளிக் கொண்டு
             தூரக் கொட்டு பெண்ணே - அட
     தூசி யாகப் பறந்து வரும்
             தூர விலகு கண்ணே!

6.  இடிச்ச புளிய எடுத்து வச்ச
             ஓலக் கொட்டான் போல - அட
     ஒடிஞ்சு விழுந்த மனசுக் கென்ன
             ஒட்டுப் போடுற வேல.

7.  ஒட்டுப் போட ஒட்டுப் போட
             ஒடைஞ்சு போற கம்பு - அட
     எட்டத் தூக்கி எறிஞ்சு விடு
             எதுக்கு இந்த வம்பு.

8.  பட்டுப் போன இலை நொறுங்கிப்
             பாட்டுப் பாடும் பாரு - அட
     விட்டுப் போன உறவை எண்ணி
             விசும்பி நிற்பது யாரு?

9.  மொட்டுப் போல மன சிருந்தா
             வாசம் எப்படி வீசும்? – அட
     மொட்டு மெல்ல மலர்ந்த போது
             தென்றல் வந்து பேசும்.

10.  வண்ண வண்ணக் கனவுகளை
               வரைஞ்சு வச்ச கையே - அட
       வக்கரித்துக் கொட்டி விடும்
               வரைஞ்ச படத்தில் மையே.

11.  திண்ணத் திண்ணத் திகட்டி விடும்
               தீஞ்சுவைகள் எல்லாம் - அட
       தின்ற பிறகு புத்தி வந்து
               தெரிவது தான் எல்லாம்.

12.  ஒன்னும் ஒன்னும் சேரும் போது
               ஒன்னு ரெண்டா மாறும் - அட
       ஒன்னம் ஒன்னும் பெருக்கும் போது
               ஒன்னு தானே தேரும்.

13.  ஒன்னப் போல உலகைப் போல
               நானிருக்க மாட்டேன் - அட
       ஒன்றை யேனும் செய்தி டாமல்
               உசிரை விட மாட்டேன்.

14.  வெம்பிப் போன பிஞ்சு லேயும்
               விதை இருக்குது பாரு - அட
       விதைகளுக்குள் ஒழிஞ்சு இறக்கிற
               விதைகள் எத்தனை கூறு?

15.  தும்பை விட்டு வாலைப் பிடிக்கும்
               புத்திசாலிக் கூட்டம் - அட
       தூக்கி எற்ஞ்ச பந்துகள் தான்
               துள்ளிக் குதிக்கும்; ஆட்டம்.

16.  தும்பி எல்லாம் பூவை விட்டுத்
               தூர விரலகிப் பேனா - அட
       துன்ப மெல்லாம் ஓடிவிடும்
               தூக்கம் வரும் தானா.

17.  நம்பி வந்த நடு வழியில
               நாலு பாதை பிரிஞ்சா - அட
       நம்ம வழிய நாம பாத்து
               நடக்க வேணும் தெரிஞ்சா.

18.  கட்டுப் போட கட்டுப் போட
               ஆறிப் போகும் புண்ணு - அட
       கட்டுச் சோத்துல எலிய வச்சுக்
               கட்ட லாமா கண்ணு?

19.  வெட்டி விட வெட்டி விட
               ஒட்டி வளரும் களைதான் - அட
       வெட்டிப் பயல் உனக் கெதுக்கு
               வெடித்த பலாச் சுளைதான்.

20.  தட்டி விடத் தட்டி விடத்
                தாங்கிப் பிடிக்கும் வயசு - அட
       குட்டி விடக் குட்டி விடக்
               குனிஞ்சு கொடுக்கும் மனசு

21.  எட்டி உதைச்ச கால் களிலே
               என்ன வசியம் வச்சியோ - அட
       எழுந்து வந்து கால டியில்
               ஏனோ தவம் கிடக்கிறேன்.

22.  உரசி உரசி பாத்த முன்னா
               தங்கம் கரைஞ்சு போகும் - அட
       உரசா மலே எடுத்த முன்னா
               பித்தளை கலந்து போகும்.

23.  உரசும் போது மனசுக் குள்ளே
               எழுந்து நிக்கிற ஆச - அட
       விரசம் ஒன்னு வந்து விட்டா
               விழுந்து விடும் பூச.

24.  ஒன்னு போல ஒன்னு இருந்தா
               மாற்றம் எப்படித் தெரியும் - அட
       மாற்றம் இல்லா வாழ்க்கை யிலே
               மகிழ்ச்சி எப்படி விரியும்?

25.  என்னப் போல உன்னப் போல
               யாரும் இருக்க வேண்டாம் - அட
       என்ன நமக்கு நடந்த தென்று
               யாரும் அறிய வேண்டாம்.

26.  நாயும் நரியும் நட்பு என்று
               நம்பி வந்த மானே - அட
       நாளை நீயும் நாய் நரியின்
               நல்ல வேட்டை தானே.

27.  நீயும் நானும் சிரித்த தெல்லாம்
               போலி யான வேசம் - அட
       போயும் போயும் நமக் கெதுக்குப்  
               புனித மான பாசம்?

28.  தாயும் சேயும் சேர்ந்து போனா
               தாரு மாறா ஏசும் - அட
       வாயும் வயிறும் வேறு என்று
               தத்து வங்கள் பேசும்.

29.  போயும் போயும் இந்த உலகில்
               நான் இருக்க லாமா? - அட
       நீயும் கூட என்ன விட்டுப்
               போயி ருக்கலாமா?

30.  தேயும் அந்த நிலவினை நான்
               தேடித் தேடித் திரிகிறேன் - அட
       தேய்ந்து நிலவு வளரும் போது
               தேய்ந்து நானும் மடிகிறேன்.

31.  சாய்ந்த மரம் காய்ந்த தனால்
               வேரின் மீது வெறுப்பு – அட
       காய்ந்த மரம் சாய்ந்த தற்குக்
               கிளை களன்றோ பொறுப்பு.

32.  பாய்ந்த புலி பதுங்கு வதால்
               பாய்வ தற்கா தயக்கம் - அட
       படுத்து றங்கப் போவது போல்
               பாசாங்கு மயக்கம்.

33.  ஓய்ந்து மனம் உலன்று தினம்
               ஒடுங்கி விடும் வேளை - அட
       ஆய்ந்து அறிய முடியாமல்
               அடங்கி விடும் நாளை.

34.  ஏதுக்கடா இப்படி நான்
               ஏளனமாய்ப் போனேன் - அட
       தீது செய்த பாவியைப் போல்
               திட்டி விரட்ட லானேன்.

35.  ஓதி வைத்த இலக்க ணங்கள்
               உதவ வில்லை எனக்கு - அட
       பாதிப் பாடம் படித்த தனால்
               பயனும் இல்லை உனக்கு.

36.  போது மடா இது வரையில்
               புலம்பி அழுத தெல்லாம் - அட
       தூது போக யாரு மில்ல
               தூய உறவு சொல்ல.

37.  மோது தடா விழி இரண்டில்
               மோக னமாய்த் தூக்கம் - அட
       மேதி னியில் எனக் கிருக்குது
               எத்த னையோ ஏக்கம்;

38.  விட்டு மனம் வெறுத் தவளை
               விலகி விட முடியுமா? - அட
       விருப்பம் இல்லை என்று சொல்லி
               உசிரை விட முடியுமா?

39.  நீரடித்து நீர் விலக
               நீள் நிலத்தில் முடியுமா? - அட
       நீ அடித்து நான் அழுக
               நீயும் சிரிக்க முடியுமா?

40.  ஊர் சிரிக்கும் வாய் அடக்க
               மூடி செய்ய முடியமா? - அட
       தேர் இழுக்கும் வடம் திரிக்க
               நார் உரிக்க முடியுமா? – கல்
               நார் உரிக்க முடியுமா?

41.  யார்எதனைச் சொன்ன போதும்
               நாம் பிரிய லாகுமா? - அட
       உயிர் இருக்கும் வரை நாமும்
               உடன் பிறப்பு அல்லவா!

42.  எங்கோ ஏதோ இடிக்கிறது - அட
               ஏனோ என்மனம் துடிக்கிறது
       பங்கோ பகையோ அடிக்கிறது - அட
               பாசம் என்றே நடிக்கிறது.

43.  மாற்றம் ஒன்று வரவேண்டு - அட
               மாட்சிமை எல்லாம் தரவேண்டும்;
       ஏற்றம் எனக்கு வரவேண்டும் - அட
               ஏக்கம் தீர வரம்வேண்டும்.

44.  காலம் இனியும் கடத்தாதே - அட
               காரியம் தவறாய் நடத்தாதே;
       ஞாலம் முழுதும் இடம் வேண்டும் - அட
               நாளும் எனக்கு நலம் வேண்டும்.

45.  என்னைப் பிடித்த இடறெல்லாம் - அட
               இன்றோ பொழிந்து போகட்டும்; (என்)
       எண்ணம் எல்லாம் ஈடேற - அட
               எதிர்புகள் எல்லாம் சாகட்டும்.
               என் வாழ்வில்
               இன்பம் பொங்கட்டும்;
               இனிமை தங்கட்டும்;
               புதியபாதை அமையட்டும்;
               பொற்காலம் மலரட்டும்.

0 comments:

Post a Comment