காத்திருக்கிறாள்……

இவள் காத்திருக்கிறாள் –
பொருளாசையே இல்லாத
புத்தனுக்காக அல்ல;

திருமணம் என்பதனைப்
புரிந்து கொண்ட
திருவாளனுக்காகக்
காத்திருக்கிறாள்……

சீர்வரிசையே
கேட்காத
சீராளனுக்காகக்
காத்திருக்கிறாள்……

தங்கத்தைப் பெற்று,
தங்கமாய் வளர்த்து,
கன்னிகாதானம் தரும்
பெற்றோரிடம்,
தங்கம் கேட்காமல்
தங்கவரும்
தங்கமனம் பெற்ற ஒரு
தங்கத்திற்காகக்
காத்திருக்கிறாள்……

முல்லை அவளுக்குத்
தன்னையே தேராக்கும்
பாரி ஒருவனுக்காகக்
காத்திருக்கிறாள்……

ஒரு பேகனின் போர்வையில்
அவனோடு தானும்
போர்த்திக் கொள்ள
இந்த மயில்
இன்னும் காத்திருக்கிறாள்……

0 comments:

Post a Comment