ஒவ்வொரு அசைவிலும்
ஒருசில பூக்கள்
உதிர்வது எதனாலே?
உயிரில் கலந்த
மணத்தைப் பிரிந்த
வாட்டம் அதனாலே…!
பிரிவது அறியாப்
பெண்ணே உனக்குப்
பிரியம் எதனாலே?
அழகும் மணமும்
அருகருகிருக்கும்
அற்புதம் அதனாலே…!
நாரே நீயும்
தலையில் இருந்து
நடிப்பது எதனாலே?
நறுமலர் தன்னை
நயமுடன் கோர்த்த
நளினம் அதனாலே…!
சிதறிக் கிடக்கும்
பூக்கள் மெல்லச்
சிரிப்பது எதனாலே?
சிகையெனும் சிறையில்
சிக்கிக் கிடந்த
சிரமம் அதனாலே…!
விடுதலை என்பது
கெடுதலையாகிற
விசமம் எதனாலே?
விழுவதை மிதிக்கும்
பெண்ணே உந்தன்
கால்கள் அதனாலே…!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment