இறைவன் இறங்கி வந்தால்……

இமயம் இறங்கி
இனிய பஞ்சாப்
சமயம் எழுப்பிய
தங்கக் கோவிலைப்
பதமுடன் பார்த்துப்
பரவசம் அடைய
முதலே நினைத்து
முடியும் முன்னே –
அடவோ அங்கே
அகாலிக் துப்பாக்கி
சுடவே பயந்து
தூர நடந்து
குஜராத் வருவான்;

இதயம் குளிர
காந்தியின் மண்ணைக்
காண நினைத்தால்,
காந்தல் கொண்டு
கயவர் பலரும்
சண்டைகள் போட்டுத்
தாக்கிக் கொண்டு
மண்டைகள் உடைந்து
மாண்டது கண்டு
அஞ்சி வருவான்
அஸ்ஸாம் மண்ணே.

பஞ்சாப் போலப்
பாழ்பட் டிதுவும்
கிடப்பது கண்டு
கேவி அழுவான்

மெல்ல இறைவன்
மேலைக் கடலின்
செல்ல விளிம்பைச்
சேர்ந்து நடந்து
சென்னை நகரம்
தெரியும் போது
எண்ணிப் பார்ப்பான்
"எப்படி இருக்கும்?"

முன்பு
கோட்டைகளாய்
இருந்தவை எல்லாம்
பின்பு
மூர்மார்க் கட்டாய்ப்
பிரிந்து
வஞ்சகர் வாழும்
வளாக மாகிப்
பஞ்சாய் நெருப்பில்
எரிந்தது அறியான்
எண்ணிப் பார்ப்பான்
"எப்படி இருக்கும்?"

கண்ணீர்க் கடலில்
கலங்கள் மிதப்பதைக்
கண்டு இறைவன்
கலங்கி நிற்பான்.

அரசியல் வேள்வி
நடத்தும் நாயகர்
உரசிய சந்தனம்
கலந்து ஓடும்
கூவம் நதியில்
குளிப்பவர் கண்டு
பாவம் இறைவன்
பதைத்துப் போவான்.

சோகம் அவனின்
தொண்டையை அடைக்க
வேகமாய் நகரின்
வீதியில் நடப்பான்

தண்ணீர் குடித்துத்
தாகம் அடக்க
எண்ணிக் கமண்டலம்
ஏந்திய கையைத்
தூக்கிப் பார்ப்பான்……
             கைபிடித் துண்டு
             பாக்கி இருக்கும்.
தெற்கே பார்த்தால் –
             ஈழத் தமிழர்
             ஈந்த குருதியால்
             ஆழக் கடலின்
             அலைகள் சிவக்க
             இலங்கையில் ஏற்றிய
             நெருப்பின் நாவு
             இலங்கு விசும்பை
             எட்டி எரிக்கப்
             பாழும் உலகைப்
             பார்த்தது போதும்……
என்றே எண்ணி
ஈசன்
சென்றே விடுவான்
சிவபுரி தானே…!

0 comments:

Post a Comment