அரும்புகளின் ஆசை

எதிர்வீட்டுப் பிள்ளை
எங்க ஜாதியில்லை;
புதிர் போட்டு அம்மா
பேசுறதோ தொல்லை.

மாடிவீட்டு மாமா
மகனப்பாரு ஜோரு;
கூடி நாங்க ஆட,
கூடுதில்ல பாரு.

எங்களோட மனசு
எவருக்குமே தெரியல;
உங்களோட மனசு
எங்களுக்கும் புரியல.

பள்ளிவாசல் பார்த்தபோது
வணங்கிப்புட்டா சீத்தா;
கிள்ளிக் காத திருகிப்புட்டார்
கோபக்காரத் தாத்தா.

பொங்க சோறு திங்கும் போது
பொட்டு வச்சா ஆத்தா;
எங்க வீடு வந்ததுக்கு
எதுக்கடிச்சார் அத்தா?

நற்ச்செய்திக் கூட்டத்துக்கு
நாங்களெல்லாம் போனோம்;
கர்த்தரோட அப்பமெல்லாம்
கன்வெர்டுக்கு மட்டும்.

ஜாதியில்லை என்ற பாட்டைத்
தமிழய்யா சொன்னார்;
நாதியில்லை கேட்பதற்க்கு
நாங்களென்ன செய்ய?

ஜாதிச் சான்று வேணுமின்னார்
பெரிய வாத்தியாரு;
நீதிநெறிச் சாரமெல்லாம்
நித்தம் பேசுவாரு.

அவரைச் சொல்லிக் குத்தமில்லை
அரசு ஆணைஅப்படி;
எவரைச் சொல்லி என்ன செய்ய
இந்தியாவே இப்படி.

எங்களைப்போல் இருந்தவங்க
இப்பவுள்ள பெருசுங்க;
எங்களையும் உங்களைப்போல்
மாத்துறது ஏனுங்க?

சாமிபேரச் சொல்லிச் சொல்லி
சாகடிச்சது போதுமே;
பூமியினித் தாங்காது
பூகம்பம் ஆகுமே.

ஜாதிமத பேதமெல்லாம்
நாய் நரிக்கு இல்லையே!
ஜாதி பாத்து மணப்பதில்லை
சாமந்தி முல்லையே!

காது மந்தமானவங்க
கவனமாகப் பாருங்க;
சாது நாங்க செய்யுறது
சரித்திரமா மாறுங்க;


சாமிகளின் சங்கமத்த
சாமி நாங்க நெய்யுறோம்;
பூமியெங்கும் ஓர் குலமாய்ப்
பூமணக்கச் செய்யுறோம்.

1 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை தோழரே...
அத்தனையும் நியாயமான வரிகள்...

Post a Comment